பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்நூல்

என் தந்தை தாயர்களாகிய

ப. விஜயரங்க முதலியார்

ப. மாணிக்கவேலு அம்மாள்

ஞாபகார்த்தமாக பதிக்கப்பட்டது

நான் கண்ட நாடக கலைஞர்கள்

திரு. கோவிந்தசாமி ராவ்

பழங்காலத்து தமிழ் நாடகங்கள் சீர்குலைந்து தெருக்கூத்துகளாய் மாறின. பிறகு, தமிழ் நாடகத்தை உத்தாரணம் செய்தவர்களுள் காலஞ்சென்ற கோவிந்தசாமி என்பவரை ஒரு முக்கியமானவராகக் கூறலாம்.

அவர் ஒரு மஹாராஷ்டிரர். இவரது முன்னோர் சிவாஜி மன்னரது தம்பி தஞ்சாவூரை ஆள ஆரம்பித்த காலத்தில் அவருடன் வந்த பரிவாரங்களில் ஒருவராம். அவர் மஹாராஷ்டிர பிரிவுகளில் பான்ஸ்லே பிரிவினர். தஞ்சாவூரில் தனது சிறுவயதில் ஆங்கிலம் கற்று பிரவேசப் பரீட்சையில் தேறினவராய் அக்காலத்தில் நமது நாட்டை ஆண்டுகொண்டிருந்த ஆங்கில கவர்ன்மெண்டில் உத்தியோகத்தில் சொல்ப சம்பளத்தில் குமாஸ்தாவாக அமர்ந்திருந்தார். இவரது வயது சுமார் 35 ஆன காலத்தில் பூணாவிலிருந்து ஒரு மஹாராஷ்டிர நாடக கம்பெனியார் தஞ்சாவூருக்கு வந்து மஹாராஷ்டிர பாஷையில் சில நாடகங்களை நடத்தினராம். இவைகளை ஒன்றும் விடாது பார்த்துக்கொண்டிருந்த கோவிந்தசாமி ராவ் தானும் அப்படிப்பட்ட நாடகக் கம்பெனி ஒன்று ஏற்படுத்தி அதில் முன்சொன்ன நாடகங்களைப் போல தாங்களும் நாடகங்களில் நடிக்கவேண்டுமென்று ஆசைகொண்ட நல்ல உருவமும், சங்கீதக் கலையும் வல்ல சில நண்பர்களை ஒருங்கு சேர்த்து மனமோகன நாடகக் கம்பெனி என்னும் பெயருடைய நாடகக் கம்பெனியைத் தஞ்சையில் ஏற்படுத்தினராம்.