பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194 ♦ நான் கண்ட பெரியவர்கள்


சொன்ன பொன்மொழிகளைக் கேட்டதையும் நன்றாக அறிவோம். ‘நமக்கென்ன வாகனமா இருக்கிறது. அந்த மடையனுக்குத்தான் மயிலிருக்கிறது என்று கூறியது நினைவில்லையா?’ என்று கேட்டார். எவ்வளவு சொல்லியும் நண்பர் ஸ்ரீகாந்தா படச்சுருளை நம்பத் தயாராக இல்லை. அரசுப் பணியாளர்கள் ஏதோ தவறு செய்துவிட்டார்கள் என்றே உறுதியாக நம்பினார். இந்நிலையில் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். ஐந்து நாள் சொற்பொழிவு முடிந்ததும் கொழும்பிலிருந்து நேரே சென்னை வருவதற்கு என்னிடம் பயணச் சிட்டிருந்தாலும் அதை மாற்றி யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் தங்கிச் செல்ல முடிவு செய்தேன். அன்று கூட்டத்திற்கு வந்திருந்த பலரும் கதிர்காமம் சென்று மயில்வாகன முருகனையும் மானுட வடிவில் யோக சுவாமிகள் என்ற பெயரில் இருந்த முருகனையும் கண்டவர்கள் ஆவர். சுவாமிகள் அங்குப் பேசியதை இவர்களனைவரும் நேரே கேட்டவர்களாதலால் அவர்கள் என்னை நம்பத் தயாராக இல்லை.

இந்த நிலையில் என் பணி முடிந்தவுடன் ஆறாம் நாள் புறப்பட்டு யாழ்ப்பாணம் வந்தேன். விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீகாந்தா இதுபற்றி அவசரமாக என்னுடன் பேச விரும்பியதால் ஓட்டுநரை விட்டுவிட்டு தானே வண்டியை ஓட்டி வந்திருந்தார். பலாலி விமான நிலையத்திலிருந்து கலெக்டர் பங்களா செல்லும்வரையில் நடந்தவற்றையெல்லாம் கூறினேன். நண்பர் ஸ்ரீகாந்தா அவர்கள் உறுதியாக அந்தச் சினிமாப் படம் பழைய படம் என்ற முடிவிலிருந்து மாறவேயில்லை. அன்று மாலை நாங்கள் மூவரும் சுவாமிகளைத் தரிசிக்கச் சென்றோம். விழுந்து வணங்கியவுடன் சுவாமிகள் “பொடியா! நீ ஏன் பட்டணம் போகாமல் இங்கே வந்தாய்?” என்றவுடன், நான் அச்சத்தோடு நடந்தவற்றைக் கூறினேன். சுவாமிகள் கடகடவென்று சிரித்துவிட்டு, “அந்த மடையனுக்குத்தான் மயிலிருக்கிறது. நாங்கள் எப்படி அங்கே போக முடியும்?