பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

9


எல்லாம் கன்றி மறைந்துவிட்டன; அவை வரலாற்றுச் செய்திகள் ஆகி வருகின்றன.

அதோ, அவனைப் பார், கஞ்சப் பயல்! காசு கொடுத்து எதையும் அவன் வாங்கி உண்ண மாட்டான்; ‘எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்’ என்பான்; பில் பணம் கொடுக்கும்போது மெதுவாகக் கை கழுவச் சென்றுவிடுவான். பணம் தருவதிலிருந்து இடம் நழுவி விடுவான்.

“நாலு நல்ல காரியம் செய்ய வா” என்றால் ‘அது நமக்கு ஆகாது’ என்பான்; ‘ஒத்துக்காது’ என்பான். ஒளிதரும் செயல்களைச் செய்யமாட்டான். “புகழ் அடையச் செயல்படுக; இல்லாவிட்டால் நின் பிறப்பே தேவை இல்லை” என்று வள்ளுவர் அடித்து அடித்துக் கூறுகிறார். ‘புகழ்’ அது தேவை இல்லை! என்று இகழ்கிறான். பசிக்கு அலையும் பரதேசிகள்! வசிக்க வழியின்றி வந்து அடையும் விருந்தினர்; சுற்றத்தினர்! அவர் உற்ற துயரைக் களைய மாட்டான்; இவன் மனிதனா? “மகனே! நீ, ஏன் பிறந்தாய்? இந்த உலகத்துக்கு நீ சுமை” என்று தாய்மை வினவுகிறது.

உடுத்துகிறானா! ஒன்றையே மாற்றிமாற்றி மடுத்துகிறான்; தோய்த்துத் தோய்த்து அது காவி ஏறிவிட்டது. பளிச்சென்று அவன் வெளிச்சத்துக்கு வருவதில்லை. வெள்ளிக்கிழமை! அன்று விரதம்தான்; ஞாயிற்றுக்கிழமையையும் அவன் வெள்ளிக்கிழமையாக்கிவிடுகிறான்; அவன் வீடே ரேஷன் கடை ஆகிறது: பிறர் கையேந்தி நிற்கிறார்; கட்டி இருந்த நாய்! அதனை அவிழ்த்துவிட்டு அவர்களை விரட்டி ஓட்டுகிறான்;