பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


சிறியோர் பிழை செய்வர்; அறிவுடைய பெரியோர் அவற்றை அழிவு தரும் என்று கொள்ளார். அவன் கல்லெடுத்து அடித்தால் நீ சொல்லெடுத்துத் தடுப்பது நல்லது; நீ வில்லெடுத்து விறல் காட்டக் கூடாது. சின்னக் கல்லால் மலம் தொட்டால் அது பிசுபிசுக்கும்; கசகசக்கும். பதிலுக்குப் பதில் என்பது மிருக நிலை; உதைக்கு உதை என்பது பழைய கதை. அவன் உன் பல்லை உடைத்தால் உடனே அவன் பல்லைக் கழற்ற முயற்சி செய்யத் தேவை இல்லை. அவன் வெட்டுகிறான்; நீ அக் கத்தியைத் தட்டிப் பறிக்கவேண்டுமே தவிர அவனை நீயும் வெட்டக்கூடாது; இருவருக்கும் பின் கட்டுப் போட வேண்டி வரும். மருத்துவச் செலவு; அருத்தமே இல்லை.

பெற்று வளர்த்த தாய் சற்றுக் கடுஞ்சொல் சொன்னால் அது சுடு சொல் என்று எடுக்காதே; அவள் அடி மனம் உன்னை அடிக்க அன்று; அணைத்துத் திருத்த; அன்புடைய மனைவி ஆவேசப்படுவாள். தட்டு முட்டு எடுத்துக் கட்டு மீறி வீசுவாள்; அவை ஒன்று இரண்டு பழுதுபடும்; அழுது தொலைப்பாள். உடனே நீ மல்யுத்த வீரனாக மாறி, அவளை மாறி மாறிக் குத்த முனையாதே; அது சுத்த முட்டாள்தனம்; அவள் உன்னை அடிக்கும் ஆற்றல் இல்லை; உனக்கு ஊறு நிகழ்த்திப் பேரு எடுக்க விரும்பவில்லை. அதனால் அவள் தன் சினத்தைச் சிறுசுகளிடம் காட்டுகிறாள்.

உன் உயிர் நண்பன் செயிர்த்துப் பேசுவான். அதற்கு உட்கிடக்கை இருக்கும். அவனை வெறும் 'குடுக்கை' என்று கருதித் துறக்காதே. பகைவன் சிரிக்கப் பேசுவான். அவன் விரிக்கப் பார்ப்பது சூழ்ச்சிவலை; அதில் ஆழ்ச்சி படாமல் எழுச்சி கொள்க. புற உரை வேறு; அகநிலை வேறு; இதனை அறிந்து பழகுக.