பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31



ஆண்டுகள் பல ஆகின்றன; எனினும், நரையற்று இருக்கின்றான். அவலம் இல்லாமல் அகமகிழ்வுடன் இருக்கின்றான். காரணம் என்ன?

விழித்து வாழ்கிறான்; சுற்றுப்புறத்தை அறிகிறான். அறிவது அறிந்து அடங்கி வாழ்கிறான்; அஞ்சத் தகுந்த வற்றிற்கு அஞ்சி வாழ்கிறான். இயன்றவரை இல்லாத வர்க்கு நல்குகிறான்; பகுத்து உண்டு பல்லுயிர் ஒம்பி வகுத்துவிட்டு எஞ்சிய ஈவு கொண்டு இன்புற்று வாழ்கிறான்; அவன் கணக்குத் தவறுவது இல்லை; நூற்றுக்கு நூறு அவன் வாழ்க்கையில் வாங்கும் மதிப்பெண். தானும் நிம்மதியாக வாழ்கிறான்; மற்றவர்களையும் வாழவிடுகிறான். உலகம் மகிழ, அம்மகிழ்வில் அவன் புகழ்வு காண்கிறான். நிறைவு அவன் மனம்; அதனால் அவனுக்கு இல்லை யாதும் குறைவு.

பாலும் தேனும் கலந்தால் இனிக்கும் என்பார் வள்ளுவர்; நட்பும் இப்படிச் செறுகிக் கிடந்தது; இடையில் சிறிது விரிசல், அந்தக் குரிசல் செய்வது தவறு; எனினும் நீ அதைத் துாற்றித் திரியாதே. நட்பின் பரிசில் என்று அதனைப் பொறுமையுடன் ஏற்றுக் கொள்; மறுபடியும் பழக இயலவில்லை என்றால் சொல்லாமல் கொள்ளாமல் விலகிவிடு.

கண்ணாடி சன்னல் நட்பு; உள்ளிருந்து கொண்டு கல்லெறிந்தால் இருவர் மீதும் படும். வெளியே வந்துவிடு; கண்ணாடி உடைப்பானேன்? கல்லெடுத்து அடிப் பானேன்? மெல்ல அவனை விட்டு விலகிவிடு; கசப்புக் காட்டாமல் மெல்லக் கழற்றிக் கொள்; நட்பு நிலைக்கும்.