பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


ஏன் செல்கிறான்? படுக்கை இன்பம் கிடைக்கிறது என்பதால்தான். இன்பம் சிறிது; அதற்கு அடையும் துன்பம் பெரிது; அவன் முயற்சி வறிது.

அவன் நிலை என்ன ஆயிற்று ? அறம் கெட்டது; புகழ் தேய்ந்தது; உறவு முறிந்தது; பெருமை சிறுத்தது; நன்மைகள் அழிந்தன, பகை தொடர்ந்தது; பழி கூடியது; பாவம் அதற்கு மன்னிப்பு இன்றி மனம் உளைந்தது.

அவன் வாழ்க்கை அச்சமே ஆசாரம் ஆயிற்று. அவன் செய்கை அவனுக்கு விசாரம் ஆயிற்று. புகும்போதும் அச்சம்; அவளோடு நகும் போதும் அச்சம், காமம் மிகும் போதும் அச்சம்; எப்போதும் அச்சம். மறைப்பது எப்படி? அதுவும் அச்சம். அகர முதலாக னகர இறுவாய் நரகமே அவனுக்கு வாய்க்கிறது; இவை அச்சத்தின் விளைவு.

பிறர் கண்டால் இவனை மட்டும் பழிக்கமாட்டார்கள்; பிறப்பைப்பற்றியும் ஆராய்வார்கள். "இவன் தாய் ஒருவனுக்கு என்று விரிக்கவில்லை முந்தானை" என்பர்; இவன் தாயின் முந்தானை இவர்கள் ஆய்வுக்கு உள்ளாகிறது. அகப்பட்டுக் கொண்டால் கைகால் நீளம் குறையும். பேடித்தனம் அவன் செய்கை, கல்வி கற்று அறிஞனாக இருக்க வேண்டியவன் விபச்சாரன் என்றும், துச்சாரி என்றும் தூஷிக்கப்படுகிறான்.

இவன் கெட்டுச் சீரழியக் காரணம் என்ன? இவன் செட்டாகச் சேரும் சிற்றினம்தான்; கொழுத்து அழகிய வடிவினள்; அவளிடம் அழுத்தமான உறவு; தொடர்ந்து அவளை மருவிக் கெடுவது இந்த ஆள்; இவன் ஒருநாளைக்கு 'அலி' என்னும் சொல்லுக்குப் பலியாவது உறுதி.