பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

படுவர். செல்வம் மிக்கு இருந்தாலும் பிறர் அல்லல் தீர்க்க முன்வர மாட்டார்கள். பேருண்மை கண்டு பெருமிதத்தோடு வாழ்வதே வாழ்க்கையாகும். உள்ளம் உயர்ந்து பிறர் துன்பத்தைக் குறைக்க முயல்வதே வாழ்வின் மெய்ம்மையாகும்; மெய்யறிவு என்பதும் அதுவே ஆகும்.

ஆற்றுப் பெருக்கு நீர்ப்பெருக்கால் நிலம் செழிக்கச் செய்து பயிர் வளர்க்கும்; உணவு பெருக வழி செய்கிறது. மக்கள் உயிர் வாழ்வுக்கு அடிப்படையாக விளங்குகிறது. மழை இன்மையால் நீர்ப் பெருக்கு இல்லாவிட்டாலும் ஊற்றுநீர்க் கொண்டு மக்கள் நீர் வேட்கையைத் தீர்க்கிறது; குடிக்க நீராகிறது. மேன் மக்கள் இருக்கும் காலத்தில் வாரி இறைப்பர்; இல்லாத காலத்தும் உதவிக் கொண்டே இருப்பர். பசையற்ற நெஞ்சோடு அவர்கள் வாழ்வது இல்லை. உயிர்களிடத்து நசை உற்ற வாஞ்சையோடு வாழ்வர்; மக்களை எப்பொழுதும் நேசிப்பர்; இதுவும் வாழவின் மெய்ம்மையாகும்.

வெள்ளெருதுமேல் சூடுபோட்டால் அது பளிச் சென்று பலர் கண்ணிலும் படும்; “பாவிகள் எருதுக்குச் சூடு போட்டுவிட்டார்களே” என்று பழி பேசுவர். சான்றோர் சிறு தவறு செய்தாலும் அதைப் பறை சாற்றி இகழ்வர்; பெரிதுபடுத்திப் பேசுவர். அதுவே கீழ்மக்கள் எருதைக் கொன்று புசித்துவிடுவர். யாரும் அதைப்பற்றி ஏதும் எடுத்துப் பேசமாட்டார்கள். வெளுத்த துணிமேல் கறை பளிச் சென்று காட்டிவிடும். அதனால் சான்றோர் தவறு செய்வது தவிர்ப்பது நல்லது.

நகைச் சுவை என்பது மென்மையானது. நுட்பமானது; அதைச் சுவைக்க மனஇயல்பு நன்றாக இருக்க