பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



வக்கீல் ஒரு கொலைகாரனை நிரபராதி என்று நிரூபிக்க முயன்றார். அவர் கட்சி பொய்யின் கட்சி; ஆனால் அது வென்றுவிட்டது! இதுதான் இந்த யுகத்தின் தர்மமா?

திரையில் படம் ‘விறு விறு’ என்று ஒடிக் கொண்டிருந்தது. விசுவாமித்திரர் அரிச்சந்திரனை எப்படியாவது ஒரு பொய் சொல்ல வைத்துவிட வேண்டும் என்று பிரம்மப்பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார்.

“கண்ணுக்குத் தெரியாததெல்லாம் பொய்யானால் பகுத்தறிவும் பொய்தான், கண்ணுக்குத் தெரிந்ததெல்லாம் மெய்யானால் கானல் நீரும் மெய்தான்; எது மெய்? எது பொய்? விஷய ஞானத்தின் தெளிவுதான் மெய்யா-பொய்யா என்பதற்கு அளவு கோல், காட்சியும் காணாமையும், மெய் பொய்களுக்கு இலக்கணமல்ல” - படத்தில் வசனகர்த்தா தன் சாமர்த்தியத்தையெல்லாம் அள்ளித் தெளித்திருந்தார். ‘பளிச் பளிச்’சென்று மின்வெட்டுப் போல அங்கங்கே வசனத்தில் தத்துவக் கருத்துக்களும் தர்க்க நியாயங்களும் மின்னின.

எல்லா நட்சத்திரங்களுமே தத்ரூபமாக நடித்திருந்தார்கள். படத்தைத் தயாரித்தவர்களுக்கு நல்ல வெற்றியைக் கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

அரிச்சந்திரன் நாடு இழந்தான், மனைவி, மகன், இருவரோடும் காட்டுக்குப் போகிறான். அலைகிறான், கஷ்டப்படுகிறான்; அப்போது நட்சத்திரேயன் வந்து மிரட்டுகிறான். அந்தச் சத்தியபுருஷன் கடனுக்காக மனைவியை விலைக்கு விற்கிறான். சுடுகாட்டுப் பறையனாகிறான். லோகிதாசனைப் பாம்பு கடிக்கிறது. சந்திரமதி நள்ளிரவில் பிள்ளையின் பிணத்தோடு சுடுகாட்டுக்கு வருகிறாள்.

“முனிசிரேஷ்டரே! நாட்டை இழந்தேன், அரசை இழந்தேன், மனைவியை இழந்தேன், மகனை இழந்தேன், என்னையுங்கூட இழந்தேன், உயிரையே இழக்க நேர்ந்தாலும் சரி, சத்தியத்தை இழக்கத் தயாராயில்லை!” - அஞ்சா நெஞ்சுடனே அரிச்சந்திரன் விசுவாமித்திரரை எதிர்த்துப் பேசுகிறான்.

சோதனை முடிகிறது. தேவர்கள் மலர் மாரி பொழிகின்றனர். விசுவாமித்திரர் அரிச்சந்திரனை வணங்கி மன்னிப்புக்கேட்டுக் கொள்கிறார்.இழந்தவற்றையெல்லாம் பெறுகிறான் அரிச்சந்திரன். கதை சுபமாக முடிகிறது. அரிச்சந்திரன் வென்றான்; சத்தியம் வென்றது.

படம் முடிந்தது.

நான் சென்ற ஆட்டோ ரிக்ஷா அத்துமீறிய வேகத்தில் ஒடிக் கொண்டிருந்தது.

"மெல்ல ஒட்டுப்பா அகப்பட்டுக் கொண்டால் வம்பு”

"நீ சும்மா வா ஸாமீ! நம்ப கையிலே வாகனத்தைப் பிடிச்சா புஷ்ப விமானங் கணக்கா பறக்கணுமுங்க.

‘சரி, இவன் நிஜமாகவே சுயநினைவில் இல்லை’ என்று தெரிந்து கொண்டேன். தொடர்ந்து அவனிடம் பேசவுமில்லை. கடவுள் புண்ணியத்தில் எப்படியாவது வீடு போய்ச்சேர்ந்தால் போதுமென்று மனத்தில் தியானம் செய்துகொண்டிருந்தேன்.