பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / புதிய நிர்மாணம் ★ 21



மனதின் தூய்மையில் மலரும் ஒளியில் அறிவின் சுடர் பிரகாசிக்குமேயானால் அது மனித சமூகத்திற்குப் புதிய உயிர்ப்பையும், விழிப்பையும் அளிக்குமானால் தங்கள் லட்சியம் கைகூடும். கலைத் தேவி அருள் புரிவாளாக .

வணக்கம்.

ராமு

சில நாட்களில் கணபதி சினிமாக் கம்பெனி ஒன்றில் வசனம் எழுதும் வேலையில் பெரிய மனிதர் ஒருவரின் உதவியால் சேர்ந்து கொண்டான் என்பதை ராமு அறிந்தான். அதோடு கணபதி எழுதிய கடிதத்தில் பணத்தை அடைந்தவர்களாலேயே உலகில் எதையும் சாதிக்க முடிகிறதென்றும், சமூக நன்மைகள் செய்வதையே மேற்கொண்டாலும் அதற்கும் பணம்தான் பிரதானமாக இருக்கிறதென்றும், அதனால் பணவருவாயைக் குறிக்கோளாகக் கொண்டே சினிமாக் கம்பெனியில் சேர்ந்திருப்பதாகவும் எழுதியிருந்தான் ராமு. கூடுமான வரையில் உயர்ந்த கருத்துக்களைக் கலையின் மூலம் பரவச் செய்வதே சிறந்த முறை ஆதலால், சினிமாத் துறையிலும் லட்சிய வழி செல்ல முயற்சிக்கும்படி பதில் எழுதினான்.

நாட்கள் இயற்கையின் உருவில் வனப்பும் வளர்ச்சியும் முதிர்ச்சியும், பயனும் எழுப்பிக் கொண்டே ஒடிக் கொண்டிருந்தன. ராமு பல நாட்களை சிந்தனையிலேயே கழித்துக் கொண்டிருந்தான். ஏழ்மை! குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பும் அவன் தலையிலேயே சுமத்தப்பட்டிருந்தது. இளம் சிறுவர்களான அவன் சகோதரர்கள் படிக்க வேண்டும். தந்தை இறக்கும் பொழுது மனைவி மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற ஆசையில், வைத்தியம் பார்க்கச் செலவு செய்து பட்ட கடனை அடைக்க வேண்டி இருந்தது. அன்றாடத் தேவைகளுக்கும் சம்பாதித்தே ஆக வேண்டும். சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தால் முடியுமா?

அவன் மனதில் தீக்கொழுந்து சுடர் விட்டுக் கொண்டிருந்தது. நான் பிறந்த இந்த நாட்டுக்காக நாட்டின் மக்களுக்காக. ஏதாவது செய்ய வேண்டும். என் உடன் பிறந்த மக்கள் மனித வாழ்வில் இன்பமும் அன்பும் தழைத்துப் பதிய பொருளும் பயனும் அளிப்பதாக இருக்க வேண்டும் என்று அவன் சிந்தித்தான்.

சில நாள் உத்தியோகம் பார்த்து வந்தான். அது அடிமைத்தனத்தின் சிறைக்கூடமாகப்பட்டது அவனுக்கு ‘கடமை என்ற பொறுப்பும், கண்ணியமும் சுயேச்சையும் உள்ளதல்லவோ தொழில். அது அல்லவோ மனிதனுக்கு மனித உணர்வுகளை வழங்கக்கூடியது’ என்று அவன் அறிவு சொல்லிற்று. இடையில் அவன் சிந்தனைகள் தழைத்துப்படர்ந்து மலர ஆரம்பித்தன.இந்த நிலையில் கணபதியின் யோசனை அவன் மனதில் படவே, தன் உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து கட்டுரைகளாகவும், கதைகளாகவும், கவிதைகளாகவும் தொடுக்க ஆரம்பித்தான். அவை புது மணம் கமழ இலக்கிய உலகிலே புகழுடன் பரவ ஆரம்பித்தன.