பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122. பரபரப்பாக ஒரு செய்தி

சுப்புரத்தினம் வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தார். ஒன்றுமில்லாத காரியத்துக்காக அப்படி ஓடிவருவதும், அலட்டிக் கொள்வதும் அவருக்கு வழக்கம்தான். சரியான சாமியார்ப் பைத்தியம் அவர்.

“ஒரு நியூஸ் கொடுக்கணும். தபால் இன்னும் அனுப்பலியே?”

“நீர் ஓடிவருகிற லட்சணத்தைப் பார்த்தால் ஏதோ கொலை, கொள்ளை மாதிரித் தலைபோற தந்தி நியூஸ் போல அத்தனை பயங்கரமா இருக்கே சுவாமீ…!”

இப்படிச் சொல்லிய நிருபர் சுவாமிநாதன் சிரித்துக் கொண்டே சுப்புரத்தினம் பிள்ளையை வரவேற்றார்.

“அபசாரம்! அபசாரம்! நான் அன்னை பரிசுத்தா தேவியின் பஜனை கோஷ்டி இங்கே முகாம் செய்யப் போறதைப் பற்றி சைவத் திருமுறைக் கழகத்தின் சார்பில் அதன் காரியதரிசி என்கிற முறையில் நியூஸ் குடுக்க வந்தால், நீர் என்னமோ ‘கொலை, கொள்ளை’ன்னு இல்லாத வார்த்தையை எல்லாம் சொல்லி மிரட்டறீரே... ஐயா?”

“உமக்கு அது மிரட்டல், எனக்கு அதுதான் ஐயா நியூஸ். ஸென்சேஷன் இல்லாமே சும்மா இப்படி பஜனை மடத்து நியூஸா அனுப்பி என்ன பிரயோஜனம்? உம்ம பரிசுத்தா தேவியும் அவர் கோஷ்டியும் இந்த ஊருக்கு வராங்கங்கிறது நியூஸே இல்லே. மாசம் பிறந்தா அவங்க தவறாமல் இங்கே வந்து போய்க் கொண்டுதானே இருக்காங்க? இந்த ஊரைப் பொறுத்த வரை அவங்க இங்கே வர்றாங்கங்கிறது நியூஸே இல்லே. வரலேங்கிறதுதான் நியூஸ் பளீர்னு தந்தி அடிக்கிற மாதிரி ஒரு நியூஸ் இல்லாமே இதெல்லாம் என்னய்யா நியூஸ்?”

“கிண்டல் போதும் சார்! இன்னிக்கி டெஸ்பாட்சிலேயே இந்த நியூஸையும் தயவுசெய்து அனுப்பி வச்சிடுங்க…”

“ஆமாம்! தலை போகிற சமாசாரம் பாருங்க. இதை இன்னிக்கி டெஸ்பாட்சிலேயே அனுப்பலேன்னாக் குடி முழுகிப் போயிடும்…!”

“தயவு செய்து ‘அன்னையார்’ விஷயத்திலே மட்டும் இப்படிச் பேசாதீங்க. இந்த யுகத்திலே பரிபூரணமான தெய்வப்பிறவி அவங்க. முழுமையடைந்த மனித அவதாரம்.”

“அதெல்லாம் சரிதான்! நல்லாப் பாடறாங்க. அவங்களும் அவங்க கோஷ்டியைச் சேர்ந்த மற்றப் பெண்களும் தூய வெள்ளை மல் புடவை அணிந்து பரிசுத்தமாக எதிரே வந்து நிற்கும் போது, சாட்சாத் சரஸ்வதியே வந்து நிற்கிற மாதிரி இருக்கு.”


நா. பா. Il - 18