பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

716 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



அவளிடமே வியப்பான் திருஆர்.எஸ்.ராஜா. வாயரட்டையிலும் தங்கள் அழகோடு சார்த்தப்பட்டு வெளிவரும் புகழிலும் மயங்காத பெண் பிள்ளைகளும் இந்த நவநாகரிக உலகில் உண்டா? எனவே திருஆர்.எஸ்.ராஜாவின் புகழ் வலையில் விழுகிற மாணவி. பலவீனமான மனமுள்ளவளாயிருந்தால் அடுத்த சில நாட்களில் அவனோடு ஏதாவது ஒரு சினிமாத் தியேட்டரில் ஒரு மாடினிஷோவில் அவளையும் சேர்த்துப் பார்க்கலாம்.

திரு. ஆர். எஸ்.ராஜாவுக்கு மெடிகல் காலேஜில் பிராக்டிகல், தியரி என்று மாற்றி மாற்றி உயிரை எடுக்கும் வைத்திய சாஸ்திர வகுப்புகளிலே சொல்லிக் கொடுக்கப்படுகிற கனமான விஷயங்களைத் தவிர வெளி உலகிலுள்ள மற்ற எல்லா விஷயங்களும்தான் நன்றாகப் பிடிப்பட்டன. பெர்ரிமாஸான், குவாலிடி ஐஸ்கிரீம், புதுப்புதுத் திரைப்படங்கள், அவ்வப்போது அருகில் வந்து நெருங்கிப் பழகியதும் சலித்துப்போகிற ‘கேர்ள் ஃபிரண்டுகள்’, நல்ல கோல்ட் பிளேக் சிகரெட், பாய் மீட்ஸ் கேர்ள் கதைகள் இவற்றில் எல்லாம் சுவை இருந்த மாதிரி மெடிகல் காலேஜின் படிப்பில் அவனுக்குச் சுவை தெரியவில்லை. காரணம் ஒழுக்கமும், உழைப்பின் சிரமமும் தெரியாத ஒரு பணக்கார அப்பாவின் ஒரே ஒரு பிள்ளையாகப் பிறந்துவிட்ட அவனை மூப்புப் பிணி சாக்காடு அறியாதபடி ‘புத்தரை’ வளர்த்ததுபோல் படிப்பு, ஒழுக்கம், உழைப்பின் மகிமை அறியாத கோயில் காளையாக அவன் பெற்றோர் வளர்த்துவிட்டதுதான். புத்தி ஒன்றாவது ஏழையின் சொத்தாக இருப்பதற்குப் பணக்காரர்கள் மீதம் விட்டிருக்கிறார்களே என்பதுதான் திருஆர்.எஸ்.ராஜாவைப் பார்த்து மற்ற ஏழை மாணவர்கள் பெருமைப்படுவதற்கு மீதமிருந்த ஒரே ஒரு விஷயம்.

பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் அவனைக் கடிந்து கொண்டு ஒன்றும் சொல்வதில்லை. சொல்லவும் முடியாது. லைப்ரரி புத்தகத்தில் அல்லது நாவல் புத்தகத்தில் காதல் கடிதம் எழுதி வைத்து மாணவிகளிடம் கொடுப்பது, அதே போல் மடிப்புக் காகிதம் சொருகி வைத்து மாணவிகளைச் சினிமாவுக்கு அழைப்பது போன்ற காரியங்கள் அவனுடைய அன்றாடக் கல்லூரி வாழ்நாளில் சர்வ சகஜமாக நிகழ்பவை. அவர் தன்னைக் கவர்கிற கல்லூரி மான்களுக்கு விரிக்கிற முதல் வலை நேரிடையாகப் புகழ்வது, அல்லது புத்தகங்களில் கடிதம் வைத்துக் கொடுப்பதுதான். பெரும்பாலும் இந்த வலைகளில் மான்கள் விழுவதுண்டு. அபூர்வமாக விழாமல் போவதும் உண்டு. காலம் பொறுத்துத் தயங்கித் தயங்கி விலகிப்போய்ப் பின்னால் நிதானமாக வந்து விழுகிற மான்களும் உண்டு. வலையை அறுக்கிற அளவு வன்மையான முரட்டு மான்கள் அவனிடம் இதுவரை எதிர்ப்பட்டதே இல்லை.

அந்த வருடம் முதலாண்டு எம்.பி.பி.எஸ்ஸில் சேர்ந்திருக்கிற புள்ளிமான் ஒன்றிற்குக் குறிவைத்து ஆர்.எஸ்.ராஜா வீசிய வலைகள் எல்லாம் கடந்த ஆறு மாத காலமாகத் தப்பிக் கொண்டேயிருந்தன. அந்தப்புள்ளிமானின் பெயர் மனோரஞ்சிதம் வயது - அதைப் பதினேழு என்றோ பதினெட்டு என்றோ நம்பரில் சொல்வதைவிட ‘இளமை மெருகேறி நகை புரியும் இன்ப வாலிபம்’ என்று இப்படிப் பாஷையால் சொல்வதுதான் சாலப் பொருத்தம்.