பக்கம்:நித்திலவல்லி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

நித்திலவல்லி / முதல் பாகம்


தெருவில் அரற்றிக் கொண்டு திரிந்ததை இப்போது நினைவு கூர்ந்தான் இளைய நம்பி. இந்தத் திருமோகூர்ப் பெரிய காராளர் மகள் செல்வப் பூங்கோதையும் தன்னை அப்படித் தெருவெல்லாம் அலைய விட்டுவிடுவாளோ என்றுகூட விளையாட்டாக நினைத்துப் பார்த்தான் அவன்.

அருமைத் தாயின் அணைப்பில் மகிழ்ந்த பருவமும், புதிய புதிய பொருள்களில் மகிழ்ந்த பருவமும், இலக்கண இலக்கியங்களையும், போர் நுணுக்கங்களையும் அறிவதில் மகிழ்ந்த பருவமும், எல்லாம் இன்று ஒரு கன்னியின் புன்முறுவலில் தோற்றுப் போய்விட்டாற் போலிருந்தது. அறிந்தவற்றை அறியாமற் செய்யும் சாமர்த்தியங்களை ஒரு பெண்ணின் அழகிற் சேர்த்து வைத்துவிட்ட படைப்புக் கடவுள் மேல் கோபம் கோபமாக வந்தது அவனுக்கு.

‘தோளும் வாளும் நல்முதியோர் பன்னாள்
   துணையா யிருந்தளித்த கல்வியுடன்
ஆளும் பெருமிதமும் என் ஆசாரங்களும்
  அத்தனையும் விழியிரண்டாற் குறிவைத்தே
நாளும் கிழமையும் பருவமும் பார்த்தந்த
  நங்கை தொலைத்திட்டாள் தன் இள நகையால்
வாளும் வேலும் படையும் வென்றறியா என்
  வன்மையெலாம் சூறையிட்டாள் விந்தையிதே’


என்பதாக அந்தத் திருக்கானப்பேர்ப் பைத்தியம் அடிக்கடி பாடிக்கொண்டு திரியும் ஒரு பாடலும் இளைய நம்பிக்கு இன்று நினைவு வந்தது. இப்படி ஒர் அழகிய நளின கவிதை எழுத முடிந்த வாலிபனைப் பித்தனாக்கி விட்டுப் போனவள் யாரோ அவள் மேல் உலகிலுள்ள எல்லா வாலிப ஆண்களின் சார்பிலும் கடுஞ்சினம் கொள்ள வேண்டும் போலவும் இருந்தது.

இளைஞர்களின் கண்களில் வசந்த காலங்களாக அலங்கரித்துக் கொண்டு வந்து நின்று அவர்களின் ஆண்மையையும், வீரத்தையும் சூறையாடும் அத்தகைய மோகினிகளில் ஒருத்தியாகத்தான் இந்தச் செல்வப் பூங்கோதையும் இளைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/41&oldid=714393" இலிருந்து மீள்விக்கப்பட்டது