பக்கம்:நித்திலவல்லி.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

487



எழுதியிருந்த ஒலைகளில் இவர்களை மதுரைக்கு அழைத்திருந்தார் பெரியவர். இப்போது போர் முடிவுக்குப் பின், இன்று வெற்றிச் செய்தியோடு, பாண்டிய நாட்டின் தலைநகருக்கு வந்திருந்த தூதர்கள் இருவரில், சேரவேந்தனின் தூதுவன் தன்னுடைய அரசன் முடிசூட்டு வைபவத்துக்காகப் பரிவாரங்களோடு மதுரையை நோக்கிப் புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தான். பல்லவ வேந்தன் சிம்ம விஷ்ணுவோ, ‘களப்பிரநாடு தன்னுடைய எல்லையில் இருப்பதாலும், பாண்டிய நாட்டிலும், தெற்கெல்லையிலும், வெள்ளாற்றங்கரையிலும் தோற்ற தோல்விகளுக்காகப் பழி வாங்குவதற்காக, களப்பிரர்கள் எந்த சமயத்திலும் தன் மேல் படையெடுக்கலாம் என்பதாலும், மதுரை மாநகருக்கு வந்து முடிசூட்டு விழாவில் கலந்து மகிழ இயலாதென்று', தன் தூதன் மூலம் மதுராபதி வித்தகருக்குச் சொல்லியிருந்தான். பல்லவன் சொல்லி அனுப்பியதில் உள்ள நியாயம் பெரியவருக்குப் புரிந்தது. பல்லவன் சிம்ம விஷ்ணு காலத்தாற் செய்த உதவிக்கு நன்றி உரைத்துப் பதில் ஒலை வரைந்து தூதனிடம் கொடுத்திருந்தார். அவர் முடிசூட்டு விழாவுக்காகப் பல்லவ மன்னன் மதுரை வந்தால், அந்த நேரம் பார்த்து பல்லவ மண்ணிற் படையெடுத்துத் துன்புறுத்தக் களப்பிரர்கள் தயங்க மாட்டார்கள் என்பதைப் பெரியவர் புரிந்து கொள்ள முடிந்தது. வடதிசையிலிருந்து மீண்டும் தெற்கே களப்பிரர் படையெடுப்பு நேராதிருக்க, வலிமை வாய்ந்த சிம்ம விஷ்ணு அரணாகவும் பாதுகாப்பாகவும் நடுவே இருக்க வேண்டிய இன்றியமையாத நிலையை உணர்ந்தே, மதுரைக் கோநகரின் மங்கல முடி சூட்டு விழாவுக்கு வரச் சொல்லி மீண்டும் அவனை வற்புறுத்தாமல் விட்டு விட்டார் பெரியவர். மற்றொருவனாகிய சேர தூதனிடம், “மகிழ்ச்சியோடு உங்கள் சேர வேந்தனை வரவேற்கக் காத்திருக்கிறோம் என்பதையும், போருக்கு முன் உங்கள் அரசனுக்கு நான் அளித்திருக்கும் வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்பதையும் எதிர் கொண்டு சென்று தெரிவித்து, உங்கள் அரசனை இங்கு அழைத்து வா!” என்று சொல்லி விளக்கி அனுப்பினார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/485&oldid=946715" இலிருந்து மீள்விக்கப்பட்டது