பக்கம்:நித்திலவல்லி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


8. திருமருத முன் துறைக்கு ஒரு வழி

வருகிறவன் தன்னை நோக்கித்தான் வருகிறானா அல்லது வேறு காரியமாக வருகிறானா என்று இளையநம்பி சிந்தித்துத் தயங்கிக் கொண்டிருந்த போதே அவன் சொல்லி வைத்தது போல் இவன் எதிரே வந்துநின்று நல்லடையாளச் சொல்லைக் கூறிப் பதிலுக்கு இவனிடமிருந்து நல்லடையாளம் கிடைத்ததும் வணங்கினான். இருவரும் நல்லடையாளச் சொல்லைப் பரிமாறிக் கொண்டு தங்களுக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டவுடன் இளையநம்பி ஏதோ பேசத் தொடங்கியபோது வந்தவன் தன் வலதுகை ஆள்காட்டி விரலை வாயிதழ்களின் மேல் வைத்துப் பேசவேண்டாம் என்பது போல் குறிப்புக் காட்டித் தன்னைப் பின்தொடருமாறு சைகை செய்துவிட்டு நடந்தான். வெள்ளியம்பல மண்டபத்தின் பின்புறத்திலிருந்த தோட்டத்தின் மற்றொரு கோடி வரை அவனை அழைத்துச் சென்றான் வந்தவன். அங்கிருந்த மதிற் சுவரை ஒட்டி ஒரு பாழ் மண்டபத்திற்கு வந்திருந்தார்கள் அவர்கள். அந்த இடத்திற்கு வந்ததும் அவனே தன் மெளனத்தைக் கலைத்து விட்டுப் பேசினான்.

“சற்று முன்னே நான் வெள்ளியம்பலத்துக்குள் நுழைந்தபோது நகரப் பரிசோதனைக்காகத் தெருவில் அலைந்து கொண்டிருந்த களப்பிர வீரர்கள் சிலர் என்னைப் பின் தொடரக்கூடும் என்ற சந்தேகம் இருந்தது. அதனால் தான் அங்கே நின்று நாம் பேசிக்கொண்டிருக்க வேண்டாம் என்று பார்த்தேன்! திருமோகூரில் பெரியவர், காராளர் எல்லோரும் நலமாயிருக்கிறார்களா? முதல் முதலாகக் கோநகருக்கு வந்திருக்கிறீர்கள்! கோநகரைக் களப்பிரர்கள் அசோக வனத்திலே சிறைப்பட்ட சீதையை வைத்திருப்பது போல் வைத்திருப்பதைக் கண்டிருப்பீர்கள்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/65&oldid=715223" இலிருந்து மீள்விக்கப்பட்டது