55. இராசாசி ஆட்சி நீடித்தது
மொழிவழி மாநிலம்
இந்திய நாடு, மொழிவழி மாநிலங்களாக உருவாக்கப்பட வேண்டும் என்பது, அனைத்து இந்திய காங்கிரசின் கொள்கைகளில் ஒன்றாக இருந்தது.
எனினும், அரசியல் உரிமை பெற்ற பிறகும் மொழிவழி மாநிலங்கள் அமைவதில் காலதாமதம் ஏற்பட்டது.
விடுதலை பெறுகையில் இந்தியாவை இரண்டாகத் துண்டாடியது
அதனால் ஏற்பட்ட வகுப்புக் கலவரங்கள்-காந்தியடிகளின் மறைவு
அய்ந்நூற்று அறுத்து மூன்று சுதேச இராச்சியங்களை இந்திய அரசோடு இணைத்ததால் ஏற்பட்ட நிலைமைகள்
அழுந்தி அவதிப்பட்டுக் கொண்டு இருந்த பிரிவினர் அனைவரும் ஒரே நேரத்தில் நல்வாழ்வுபெற நடத்திய போராட்டங்கள் ஆகியவை அரசின் நாட்டங்களை வேறு பக்கம் ஈர்த்தன.
ஆந்திர மக்கள், தனி மாநிலம் பெறும் பொருட்டுப் போராட்டம் நடத்த நேர்ந்தது. பொட்டி ரீராமுலு என்பவர், ஆந்திர மாநிலப் பிரிவினை கோரி உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார்.
ஆந்திர மாநிலம் 1-10-1953 முதல் உருவாகும் என்று இந்திய அரச உறுதியாக அறிவித்தது.
இந்திய அரசின் அறிவிப்பிற்குப் பிறகே, இணைந்த சென்னை மாகாணச் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது; 30-7-1953 வரை சட்டமன்றத்தை நடத்துவது என்ற முடிவு செய்தது.
முதல்நாள் சிறுதோல்வி-மறுநாள் பெரும் வெற்றி
அரசின் அலுவல் பற்றியவை முடிவான பிறகு ஒரு நாளோ, சில நாள்களோ, தனியார் கொண்டு வரும் தீர்மானங்களுக்கும் சட்ட முன் வடிவுகளுக்கும் ஒதுக்குவது வழக்கம்.
குறிப்பிட்ட கூட்டத் தொடரில் 27-7-1953 அன்று தனியார் தீர்மானத்தை விவாதிக்கத் தொடங்கினார்கள். 30-7-1953 அன்று தொடர் விவாதத்திற்கு ஒதுக்கி இருந்தார்கள்.