பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வாழலாம்

39


 அவனது ஒவ்வொரு செயலிலும் இந்தத் தளர்ச்சி வந்து புகுந்து கொள்கிறது. அவன் எதையோ பறிகொடுத்தவன் போல ஊசலாடுகிறான். வாழ்வே போனது போல அழுது வழிகிறான். அலறி அலறி நலிகிறான்.

நடையில் தேக்கம், தோள்களில் கவிழ்ச்சி, முகத்திலே சந்தோஷத்தின் வறட்சி, ஆமாம், மனதால் தளர்ந்து போகிற யாருமே, தன்னம்பிக்கையை உடனே இழந்து போகின்றார்கள்.

மனதைக் கட்டுப்படுத்தி விட்டால், ‘முதுமை இன்னும் வரவில்லை. இளமையுடன் தான் இருக்கிறோம்’ என்ற உணர்வினை உண்டாக்கிக் கொள்கின்றன. தேங்கிய நடையில் தெளிவு கிடைக்கிறது. களையிழந்த முகம் பொலிவு கொள்கிறது. நிமிர்ந்த மார்பு, உணர்வுகளைக் கொப்பளிக்கும் தினவு மிகுந்த கால்கள் உற்சாகம் கொள்கிறது. ஆமாம். மனம்தான் அத்தனைக்கும் காரணம்!

எப்படி இந்த மனதை இதமாக்கிக் கொள்வது? பதமாக வழிக்குக் கொண்டு வருவது?

“உலகத்திலுள்ள இன்பங்களையெல்லாம் இளமைக் காலத்தில்தான் அனுபவிக்க முடியும். முதுமை வந்தால் எல்லாமே முடியாமற் போய்விடும்” என்ற ஒரு மூன்றாந்தர நினைவு எல்லோரிடமும் இருக்கிறது.

அதனால் தான் ‘இளமையே இரு. முதுமையே பொறு’ என்று எல்லா தர மக்களும் கூறுகின்றனர். ஆசைப்படுகின்றனர். உள்ளுக்குள்ளே அவதியும்படுகின்றனர்.

ஆனால் நாம் மனதைத் தயார்ப்படுத்திக் கொண்டோமானால், வயதான காலத்திலும் வருந்தாமல் வாழமுடியும்.