பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


8. வதந்திக்கோர் வனிதாமணி

தான் என்ன நினைக்கிறோம் என்பதை வெளியில் சொல்லாமல் மனதில் போட்டுக் கொண்டு, மருகிக்கொண்டிருப்பவர்கள் பலர். தான் என்ன செய்யப் போகிறோம் என்பதை வெளியில் சொல்லாமலேயே, மர்மமாக நல்லது செய்ய விழைந்து, மனப்போராட்டத்தில் உருகிக் கொண்டிருப்பவர்கள் சிலர் செய்கின்ற தவறைத் திருத்திக் கொள்ளாமல், இதிலே திருப்தி பட்டுக்கொண்டு தேய்ந்து கொண்டிருப்பவர்கள் பலர். இவ்வாறு, மன நோய்க்குப் பாய் விரித்து, படுக்கை அமைத்து, படுவேதனைக்கு ஆளாகும் மனிதர்கள் சற்று சிந்தனை செய்ய ஆரம்பித்தால் போதும், சந்தோஷம் தானாகவே வந்துவிடும்.

வாய்க்குத் தீனி போட்டு, வாயைத் திருப்திபடுத்தி வதைபட்டான், வாழ்வை இழந்தான் கனகசுந்தரம். வாயையே தீனியாக்கி வதந்தியில் மிதக்கவிட்டு, தன் வாழ்வையே இழந்தாள் ஒரு வனிதாமணி, அவள் பெயரும் வனிதாமணிதான்.

படித்தவள்தான். பலருக்குப் புத்திமதி சொல்லக் கூடிய உயர்ந்த நிலையில் இருப்பவள்தான். பணவசதிக்குக் குறைச்சல் இல்லைதான். நினைத்ததை வாங்கக்கூடிய நிலைமையில் வாழ்பவள்தான். பொறுப்பான அரசாங்கப் பணியில் சில ஆண்டுகளாக இருப்பவள். அவளுக்கு ஒரு மனத்திருப்தி. அதாவது அடுத்தவர்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான்.