பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வெப்ப நாடுகளில் வசிப்பவர்கள் குளிர்ந்த நீரிலே குளிப்பதுதான் அறிவுடமையாகும். குளிர்ந்த நீரானது குளிர்ந்த உடலின் வெப்ப நிலையை சீராக்கி சமப்படுத்துகிறது. அதிக வெப்பமுள்ள நீரில் குளித்துப் பழகியவர்கள் நரம்புத்தளர்ச்சி நிலையை அடைகின்றார்கள் என்ற கருத்தும் உண்டு.

வெந்நீரில் குளிக்கும் பொழுது, முதலில் மேற்பகுதியில்லாமல் கால், பிறகு தொடை இப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக மேலாகக் கொண்டு நீரை ஊற்றி, வந்து பிறகு தலையில் ஊற்றிக் கொள்ள வேண்டும். தண்ணீரில் குளிப்பவர்கள் தலையில் முதலில் கொட்டிக் கொண்டால், குளிர் தெரியாது. இவ்வாறு இரு வகையாக நீரில் குளிக்கும் முறையைக் கையாளலாம்.

ஆற்றில் குளிப்பது உடலுக்கு உடற்பயிற்சியாகவும், அதே நேரத்தில் சிறப்பான குளியலாகவும் அமையும். ஆறில்லா ஊரில், வீட்டிலே குளிப்பவர்களுக்கு இந்த வாய்ப்பு குறைவுதான் என்றாலும், குளித்தோம் என்கிற மனத்திருப்தியாவது அமைகிறதே!

உடலுக்கு சோப்பு போட்டுக் குளிப்பது நல்லதா என்றால், அந்த சோப்பால் உடலுக்கு ஏதாவது கோளாறு ஏற்படாமல் இருந்தால் சரி. பழக்கப்பட்டுப் போகிற சோப்பையே பயன்படுத்திக் கொள்ளலாம். பாதகமில்லை. அதிக சோடியம் அல்லது பொட்டாசியம் உப்புக்கள் இல்லாத சோப்புக்கள் உடலுக்கு ஊறுவிக்காதவையாகும்.