பக்கம்:நூறாசிரியம்.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

127

போர்த்து-மேலே போர்த்துக் கொண்டு- உடுத்தல் என்னாது போர்த்தல் என்றமையான், அவை உடுத்தியிருந்த முறைமை அறியப் பெறும்.

மறுகிடை - தெருவிடை விளைவும், வீடுமின்றி இடைக்குறையாக இருத்தலின் தெரு, மறுகு எனப்பெற்றது.

அசையும் மடக்கொடி யோயே - அசைந்து செல்லும் இளங்கொடி போன்றவளே மடப்பம் இளமை, மடமை மிக்க கொடியவளே என்றும் சிறப்புப் பொருள் கொள்க.

நாண்மிக வுடைத்தே நிற் பெண் தகையே - நினக்குற்ற பெண் தகைமை பார்ப்போர்க்கு நாணத்தை உண்டாக்குகின்றது. பெண்மைக்கு நாணம் அணிகலன். அஃது அவளிடத்தில் இல்லாமையால் அவளைப் பார்ப்போர் நாணமுற வேண்டியிருக்கின்றது என்க.

என்கொல் அறிகிலம் நின் உளக் கிடக்கை - நின் தோற்றத்தைப் பார்க்குங்கால் நினக்குற்ற கருத்து யாதெனப் புலப்படவில்லை. உளக்கிடக்கை என்பது அடிமனத்தே புதைந்து கிடந்து எவர்க்கும் எளிதே புலப்படாத ஆசை என்க. கிடத்தல்-தோய்ந்து கிடத்தல்.

இளம் பொன் மேனி எழில் காட்டுவையினே-பருவப் பூரிப்பும் பொன்மையும் சான்ற அழகிய உறுப்புகளைக் காட்ட விழைவது நின் கருத்தாயின்.

அவளின் புறத்தோற்றம் காண்பவர் ஒருவேளை அவளுக்குற்ற வண்ணம் அதுவோ என ஐயறவேண்டியிருந்த தென்க

மைம்புகை யாடி - கரிய புகை தோய்ந்த கண்ணாடிக் குமிழ்.

ஒளிமழுக்கல் போல் - விளக்கின் சுடரொளியை மழுக்கிக் காட்டுவது போல்.

கரிய புகை தோய்ந்த கண்ணாடிக்குமிழ், உள்ளிருக்கும் ஒளியை ஒருவாறு காட்டினாலும் தெளிவுறக் காட்டாமை போல், அவள் உள்ளுறுப்புகளின் எழிலை அவள் போர்த்தியுள்ள மெல்லாடை முற்றும் வெளிப்படுத்தாமற் போயினும் ஒருவாறு மழுக்கமுறக் காட்டிய தென்க. இங்கு உள்ளுறுப்புகளை முழுவதும் காட்ட வேண்டும் என்பது அவள் கருத்தாயின், அஃது அவள் அணிந்துள்ள உடையால் நிறைவுறவில்லை என்பது குறிக்கப்பெற்றது.

ஆகலின் - நன்றே - ஆகையால் அவள் அவ்வுடையையும் கூட அகற்றிவிடுதல் நன்று என்று அவட்கு மானம் புலப்படச் சுட்டிச் சொல்லப் பெற்ற தென்க.

ஈங்கிது - இப்படிச் செய்வது. அஃதாவது அவ்வுடையை முற்றும் அகற்றுவது.