பக்கம்:நூறாசிரியம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

நூறாசிரியம்

ஒய்வின்றி இயங்குவதையும் கண்டு வியப்பும் இரக்கமும் மேலிட, தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லி, அத்தகைய அவளைப் பெற்றமைக்காகப் பெருமிதம் கொண்டதாக அமைந்ததிப்பாட்டு.

யாங்கு ஒய்வாளோ -எவ்விடத்து எவ்வகையில் ஒய்வு கொள்வாளோ? இரக்கவுணர்வால் பாட்டின் முதலாக நின்றன இச்சொற்கள்.

தூங்கு பின்- தூங்கிய பின் இறந்த காலத்தை உணர்த்தியது.

ஆங்கு- அவ்வாறே பொறுப்புடன் எல்லாரையும் தூங்கச் செய்த பின் தூங்கியவள். அதே பொறுப்புடன் எல்லார்க்கும் முன்னே எழுந்ததைக் குறிப்பிட்டது.

வாழில்- வாழ்தல் செய்கின்ற இல்லத்தை,

வினைந்து - வினையைச் செய்து.

கொண்டு - போய்க் கொணர்ந்து

மணியுடல் - அழகிய வுடல் இல்லறப் பணிகளால் அவளுடல் துயர் கொள்வதைப் பொறாத வுளத்துடன் வெளிப் போந்ததாகும் இச்சொல். இவ்வழகிய வுடலை அவள் ஒய்வின்றி அலைவு செய்கின்றாளே’ என்று காதலாற் கசிந்தது.

மண்ணி - கழுவி, மணியுடல் என்றதால் மண்ணி எனலாயிற்று. அவள் உடல் வருத்தமுறாது இருத்தல் வேண்டும் என்னும் குறிப்புத் தோன்றக் கூறியது.

குனிநுதல் - வளைந்த நெற்றி.

பளிங்கில் -பளிங்கு போல் ஒளி பொருந்திய நெற்றி.

குங்குமம் இலங்க எமை விழிப்பித்து - தான் கண்விழிக்கையில் தன் முன் அவள் குளித்து முழுகிய தோற்றத்துடனும், குங்குமம் விளங்கும் நெற்றியுடன் கூடிய மலர்ந்த முகத்துடனும் நிற்பது, தலைவன் உள்ளத்தில் அவளுக்கொரு பெருமையைத் தோற்றியது. தட்டியோ, அழைத்தோ எழுப்பாமல், நெருக்கமாய் அருகில் நின்றோ கையால் மெதுவாகத் தீண்டியோ, நீவியோ அவன் தானே விழிப்புறும்படி செய்தாள் என்க.

அவள் தன்மேல் கொண்ட அன்பையும் மதிப்பையும் அவன் உணர்ந்து வியந்தது குறிப்பால் நின்றது.

சிறாரை எழுப்பி-தம் குழந்தைககளை உலுப்பியோ, கூவியோ விழிப்புறச் செய்தாள் என்றபடி

இங்குத் தலைவனை விழிப்புறச் செய்தபின் அவள் அவ்வாறு செய்ததும், அதற்கு முன் செய்யாமையும், பிள்ளைகளை எழுப்பும் அரவத்தான் தலைவன் திடுக்கிட எழக்கூடாதே என்னும் அவள் மனக் குறிப்பை உணர்த்திற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/188&oldid=1220695" இலிருந்து மீள்விக்கப்பட்டது