பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

நெஞ்சக்கனல்

வைத்துப்பேசினார். டெல்லியிலிருந்தபோது தற்செயலாக ரமேஷ்சிங்ஜியைச் சந்திக்க நேர்ந்தது ரமேஷ்சிங், “ஐநெவர் ஃபர்கெட் யுவர் இட்லி சாம்பார் அண்ட் மாயாதேவிஸ் டான்ஸ் பெர் பாமன்ஸ்”– என்று வியந்தார் . கமலக்கண்ணன் புன்னகை புரிந்தார். பேச்சினிடையே “வெரி வெரி... ஸ்வீட் கேர்ல்” என்று மாயாவைப் பற்றி மறுமுறையும் குறிப்பிட்டார் ரமேஷ்சிங். டெல்லியின் தனிமையில் அவளுடைய பெயரைக் கேட்டதுமே கமலக்கண்ணன் ஆசை மயமாகிவிட்டார். அன்றிரவே டெல்லியிலிருந்து மாயாவுக்கு ஒரு டிரங்க்கால்’ போட்டு, “ரமேஷ்சிங் உன்னை மறக்காமல் விசாரித்தார். பலே ஆளாச்சே நீ...? உன் கியாதி டெல்லி வரை பரவியிருக்கு” என்று பேசினார்.

“ரொம்பக் குளிராயிருக்குமே டெல்லியிலே? என் ஞாபகம் வரதா உங்களுக்கு...என்ன வரலியா?”

“ஞாபகம் வராமல. இப்ப ஃபோன் பண்ணினேன்?”

“அது சரி! நான் சொன்ன பஸ்ரூட் விஷயம் மறந்தே போச்சா; என்ன? அந்தப் ‘பார்ட்டி’ இன்னும் கன்னிமராவிலேயே...?”

“ஆல் ரைட் மாயா! ஐ வில் ஃபோன் அப் டு தி கன்ஸ்ர்ன் மினிஸ்டர் டு நைட் இட்ஸெல்ஃப், மோஸ்ட் ப்ராப்பலி ஹி வில் கெட் தி ஆர்டர்ஸ் டு–மாரோ ஆர் டே ஆஃப்டர் டுமாரோ...ஓ கே..”

“தாங்க் யூ...தாங்க் யூ...நான் அவருக்கு இப்பவே சொல்லிடறேன்...”

“ஐயையோ! இப்பவே சொல்லிடாதே! கன்னிமரா வைக் காலி பண்ணிட்டு உடனே செகரெட்டேரியட்டுக்கு ஒடிடப் போறான்...நாளைக்குச் சொல்லு போதும்” என்று ஃபோனில் ஜோக் செய்தார் கமலக்கண்ணன். மாயாவோடு பேசி முடிந்தபின் அந்த இனிய சொப்பனங்களைத் தழுவிய படியே டில்லியின் குளிர்ந்த இரவை வெது வெதுப்பாக்கிக் கொண்டு உறங்கினார் கமலக்கண்ணன்.

மறுநாள் மாலை மாயாவிடமிருந்து அவருக்கு டிரங்க...கால் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/160&oldid=1049078" இலிருந்து மீள்விக்கப்பட்டது