பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ix

அவர்கள் சமுத்திரத்தின் கதைகளைத் திறனாய்வு செய்கிறார்.

சமுத்திரத்தின் படைப்புக்களைப் பல்கலைக் கழகங்கள் பாடநூலாக ஏற்றுக்கொண்டுள்ளன. பத்திரிகைகள் இவரது படைப்புக்களை விரும்பி வெளியிடுகின்றன. இவர் சிறந்த வாசகர் அணியினை உருவாக்கி வருகிறார். இவரது படைப்புக்கள் பல்கலைக்கழக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படுகின்றன. சமூகப் பொறுப்புடன் எழுதும் சமுத்திரம் படைப்புக்களில் சமூகப் பார்வை மிகத்துல்லியமாக உள்ளது. பிரச்னைகளை அணுகும் முறையில் தனித்தன்மை காணப்படுகின்றது. ஆசிரியரின் கருத்து வெளிப்பாடு குழப்பமின்றி தெளிவான நடையில் உள்ளது. ஆழங்காண முடியாத மக்கள் சமுதாயத்தின் உணர்வு அலைகளை ஓவிய மாக்குவதில் சமுத்திரத்தின் படைப்புக்கள் சமுத்திரம் போன்று அகன்று பரந்து விரிந்து உள்ளது.

மேல் மட்டத்தில் வாழ்பவரது ஆதிக்க எண்ணங்கள், சர்வாதிகாரப் போக்குகள், எண்ணத் தடிப்புகள், ஏழை எளிய மக்களை எவ்வாறு சுட்டெரிக்கின்றன, வாட்டி வதைக்கின்றன என்பதனை ‘நெருப்புத் தடயங்கள்’ ஓவியமாக்குகின்றது. மனிதனின் வாழ்வு தாழ்வு மட்டுமல்ல; எண்ணக் குமுறல்கள் எழுத்தோவியம் ஆக்கப்பட்டுள்ளது. படுபாதாளத்தில் பரிதவிக்கும் மக்கள் கூட்டத்தின் மன நோவுகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

நவநவமான சிந்தனைகளைத் தமிழுக்கு வழங்கி வரும் சமுத்திரம், தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த சமுத்திரம் ஆவார்.