பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xii

கொண்டிருக்கும்போது, விரிவான பார்வையோடு, முழுச் சுதந்திரமாய், என்னை எழுதவைத்த, ‘தேவி’ ஆசிரியர், திரு. இராமச்சந்திர ஆதித்தன் அவர்களுக்கு, மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். முன்பும், ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ அவரது முன்னோடிப் பார்வையால்தான் உதயமானது. இதேபோல், தேவியின் உதவியாசிரியர் திரு. ஜேம்ஸ், அத்தியாயம் அத்தியாயமாய் விழர்சித்து, எனக்கு அதிக யோசனைகள் வழங்கினார். ‘தேவி’யில் வந்த இரண்டு தொடர்கதைகளின் வெற்றிக்கான காரணங் களில், ‘ஜேம்ஸ்’ என்ற உச்சரிப்பும் ஒன்று. ‘தேவி’யில் படித்து முடித்ததும் அந்த பத்திரிகைக்கும் எனக்கும் கடிதங்கள் எழுதிய ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு, என் நன்றி.

வழக்கம்போல், என் ஆஸ்தான பதிப்பகம் மணிவாசகர் பதிப்பகமே, இந்த நாவலையும் வெளியிடுகிறது. எழுத்தாளன் படைப்புகள், நூலகங்களுக்கு ‘ஆர்டரானால்’தான் அரங்கேறும் என்ற நிலை எனக்கு எப்போதும் வந்ததில்லை என்றால், அதற்கு ஒரு காரணம் ஒரே காரணம் திரு. ச. மெய்யப்பன் அவர்கள் தான். நான் பெறும் வெற்றியை தான் பெற்றதாக நினைக்கும் இனிய நண்பர். பதிப்பகத் துறையின் ஒரு சில அத்திப் பூக்களில் ஒரு பூ.

இதேபோல், திரு. ச. மெய்யப்பனின் உதவியாளர்களான பிரபல நாவலாசிரியரும், பத்திரிகையாளருமான, திரு. க. நாராயணன் அவர்களும், திரு. குருமூர்த்தி அவர்களும் பல படைப்புக்கள், அச்சேறுவதற்கு முன்பே, அரும் பெரும் யோசனைகளைச் சொன்னவர்கள். ஒவ்வொரு கட்டத்திலும், என்னைக் கலந்தாலோசிக்கும் இலக்கிய சகாக்கள். இவர்களுக்கும் கடப்பாடுபட்டுள்ளேன். படைப்பு என்பது ஒரு கூட்டு முயற்சி என்பதாலேயே மேலே சில விவரங்களையும், நண்பர்களையும் கோடிகாட்டி இருக்கிறேன்.

நல்லது; படித்துப் பாருங்கள்; பிறகு, நல்லது, கெட்டதை, எழுதிப் போடுங்கள்.

அன்பன்,
சு. சமுத்திரம்.