பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

3


அவளுக்குப் பைத்தியம் வந்து விட்டால், ஊராருக்கும் பைத்தியம் வந்ததுபோல் ஆகிவிடுமாம். புதுப் பணக்காரர்களின் பழைய குப்பைகளைக் கிளறுவதோடு, பட்டுப் புடவைக்காரிகளின் பழைய வரலாற்றை நிர்வாணப்படுத்தி விடுவாளாம். ஆகையால் முத்துமாரிப் பாட்டிக்கு, வழி, வழிக்கு வந்தது. பெண்கள், அவளைப் பார்த்ததும் தாதிகளானார்கள்.

சுவரை ஒட்டிப் போடப்பட்ட நாற்காலியில், பிரயாண அலுப்பைத் தீர்ப்பது போல் தலைசாய்த்து அமர்ந்திருந்த தமிழரசியின் தலையை, குனிய விரும்பாத-அல்லது முடியாத பாட்டி, தன் முகத்திற்கு நேராக இழுத்து, அவள் கன்னத்தில் வைத்த வாயை, ஒரு நிமிடம் வரை எடுக்காமல் இருந்தாள். அண்ணி தமிழரசியைப் பார்க்க வந்த 'பத்தொன்பது' பொன்மணி, சும்மா இருந்திருக்கலாம். இருக்கவில்லை. "பார்த்து பாட்டி... அண்ணிக்கு கன்னம் இருக்கட்டும்..." என்றாள், பொன்மணியின் போறாத காலம், உடனே எல்லாப் பெண்களும் சிரித்து விட்டார்கள். தமிழரசியின் கன்னத்தைச் சுவைத்த பாட்டி. வாயை விலக்கி, அவலைச் சுவைப்பவள்போல், நாக்கை அசைபோட்டுப் பேசினாள்.

"நான், என்ன... வயலுல தண்ணி பாய்க்கிறவன் சாப்பிடுறதுக்காவ மம்பெட்டிய மாத்தும்போது உதடு வள மாத்துறேனா... சோளத்தட்டை மறைப்புல அவன சுன்னத்துல 'கன்னம்' போடுறேனா... அவனுக்கு ஊட்டி விடுறேனா... நான் என்ன ஆம்புளைக்கா முத்தம் கொடுத்தேன்?..."

பொன்மணி வெறும் மணியானபோது, ஒருத்தி, "பாட்டிக்கு இன்னும் ஆச போகல பாரு"... என்று சொல்லிவிட்டு, தன்னைக் கூட்டத்துள் மறைத்துக் கொண்டாள். பாம்புக் காதுப் பாட்டி, நீர்ப்பாம்பு போல் நெளிந்தபடி கேட்டாள்;