சு. சமுத்திரம்
11
வேண்டாம்... எனக்கு பச்சைத் தண்ணி போதும்...”.
தமிழரசி, குளிப்பதற்காக உள்ளே போகப் போனாள். வெளித்தளத்தில் கல்தூணில் சாய்ந்தபடி, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கலாவதியின் தந்தை, மாடக்கண்ணுவைப் பார்த்தாள். அப்பா கூடப்பிறந்த சொந்த சித்தப்பா. அண்ணன் மகள் வேறு, தன் மகள் வேறு என்று வித்தியாசம் பாராட்டாமல் சிறு வயசில் இருந்தே, இருவரையும் இருதோளில் போட்டவர். இருவருக்கும் எது வாங்கி வந்தாலும் சமமாக வாங்கி வருபவர். வாய் அதிர்ந்து பேசியோ, கையதிர ஆரவாரமாகவோ பேசாதவர். இதனால் ஊரில் அவருக்கு ‘பைத்தியாரத் தர்மரு’ என்று பட்டப்பெயர். அதனாலோ என்னவோ, எப்படியோ சொத்தை கோட்டை விட்டார். ஊரார் பாதி பிடுங்கிவிட்டார்கள் என்றால், அப்பா மீதியைப் பிடுங்கி விட்டார். இப்போ அவருக்கு ஒரு ஓலை வீடும், கலாவதியும், மகன் வினைதீர்த்தானுமே சொத்துக்கள்.
அண்ணன் மகளின் பார்வை, தன்மேல் படுவதற்காக தவம் இருப்பவர் போலவும், அதே சமயம் தனது நிலைமையை எண்ணி, பெஞ்சில் உட்கார விரும்பாதவர் போலவும், விக்கித்து, தரையில் இருந்தவரை, தமிழரசி தாளமுடியாமல் பார்த்தாள். பிறகு “பெஞ்சில் உட்கார்ந்தால் என்ன சித்தப்பா?” என்றாள். சித்தப்பாவிற்கு, அன்றைக்கே ஒரு எட்டுமுழம் மல் வேட்டியும், ஜரிகைத் துண்டும் எடுத்துக் கொடுத்துவிட்டால், அவராகவே, தானாக பெஞ்சில் உட்காருவார் என்று நினைத்துக் கொண்டாள். ஊர்ப் பெரியவர்களை அனுப்பி விட்டு உள்ளே வந்த தந்தை அருணாசலம், “முதல்ல குளிம்மா...” என்றார். உள்ளே அவள் வருகையை அம்மாவும், சித்தப்பா மகள் கலாவதியும், மணப் பெண்ணின் தங்கை பொன்மணியும் ஆவலோடு எதிர்பார்ப்பதுபோல், கண்களை அகலப்படுத்தினர்கள்.