பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

நெருப்புத் தடயங்கள்

"அப்படின்னா கல்யாணம் ஒங்களுக்கு இல்லியா?”

‘எனக்கா? நான் இந்த ஊர்லேதான் பண்ணிக்கப் போறேன். நான் வேலை பார்க்கற இடத்துல ஒரு பையன் ஹைஸ்கூல் டீச்சராய் இருக்கான். பி. ஏ. பி.டி. வசதியான குடும்பம். பேசிப் பார்த்தேன். சரின்னுட்டாங்க, 'ஒங்களைப் பார்த்ததே பொண்ணைப் பார்த்தது மாதிரி. இனிமேல் நிச்சயதாம்பூலத்துக்குத்தான் ஓங்க வீட்டுக்கு வரணும்’னாங்க. ஏன் சிரிக்கிறீங்க?”

‘'சிரிப்புக்கு எத்தனயோ காரணம். நீங்க 'இங்க’ போடுறதுனால, எனக்கு வயசாயிட்டோன்னு சிரிப்பு. “ஒங்களப் பார்த்தால் பொண்ணைப் பார்த்தது மாதிரின்னு’ மாப்பிள்ளை வீட்ல சொன்னதாய் சொன்னிங்க, சிரிக்காமல் எப்படி?”

தாமோதரனும், அவளோடு சேர்ந்து சிரித்தான். மகிழ்ச்சி என்பது காரண காரியமற்ற ஒரு தொற்றுணர்வு என்பதை நிரூபிப்பதுபோல், கலாவதி, அந்தச் சிரிப்பிற்கு அர்த்தம் தெரியாமலே சிரித்தாள். பிறகு, தமிழரசியின் கையைப் பிடித்து, "வா... பம்ப்செட் நின்றுடப்போவுது" என்று சொல்லி செல்லமாக இழுத்தாள்.

தாமோதரன் பல்லைக் கடித்து, அங்கேயே அவளைக் கைது செய்து காவலில் வைக்கப் போவதுபோல் பார்த்த போது, தமிழரசி "ஏய்... கலா... என்னால இப்போ நடக்க முடியாது. இங்கேயே குளிக்கலாம்" என்று சொல்லி விட்டு, தாமோதரனைப் பார்த்து இவளுக்கும் நாகர் கோவிலுல ஒரு மாப்பிள்ளை பாருங்க” என்றாள்.

கலாவதி, அப்போதே கல்யாணமானதுபோல் நாணி, தமிழரசியை முன்னிலும் பலமாக இழுத்தாள். காரணத்தோடுதான். விஷயம் புரிந்துவிட்டது. நாலுபேர் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? பெரியப்பாவோட குடும்ப கவுரவம் லேசுப்பட்டதா?