□ 217
எல்லோர் முகத்திலும் பரிதாப உணர்ச்சி, "யார் பெத்த பிள்ளையோ?" என்று அனுதாபப்படுகிறது ஒரு குரல்… மறுநாள் பத்திரிகையில், இளைஞனின் கோர மரணம் என்ற தலைப்பில் செய்திப் பிரசுரம்… ஊரெல்லாம் இதே பேச்சு… அம்பாசமுத்திரத்துக்கும் செய்தி கிடைக்கிறது… கமலா துடிதுடிக்கிறாள்!… மணியின் பிணத்தின்மீது விழுந்து அலறுகிறாள்…! சங்கர் கண்ணீர் விடுகிறான்… மணியின் தாய் புலம்புகிறாள்…!
என்ன அலங்கோலம்? என்ன பரிதாபம்?
மணி அந்தக் காட்சியின் கற்பனாலங்காரத்தை எண்ணிப் பார்த்தான்; உலகத்தின், உற்றாரின் கவனமும் அனுதாபமும் ஒரேகணத்தில் தன்மீது, தன் பிணத்தின்மீது திரும்புவதைக் காணும் அவனது கற்பனையுள்ளம் இன்னதெனத் தெரியாத திருப்தியும் மகிழ்ச்சியும் கொண்டது…
திடீரென்று அவன் உடம்பின்மீது ஏதோ ஒரு ஈரவுணர்ச்சி கொண்ட பொருள் நழுக்கென விழுந்து துள்ளியது. மணி அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்திருந்தான்; அவனது பலவீனமான இருதயம் படபடவென்று துடித்துக் குதித்தது. '
"என்ன அது? தேளா?… பாம்பா…"
மணி மறுகணமே விளக்கின் சுவிட்சைப் போட்டான்; ஒரு வெள்ளைப் பல்லி அவன் படுத்திருந்த கட்டிலிலிருந்து துள்ளிக்குதித்து ஓடி மறைந்தது.
பல்லிதானா!…"
மணி மனத்தைச் சமாதானப்படுத்திக் கொண்டான்; எனினும் அவனது இதயப் படபடப்பு மட்டும் சாந்தி பெறவில்லை. திடுக் திடுக்கென்று குதிக்கும் இதயத்தோடு அவன் மீண்டும் விளக்கை அணைத்துவிட்டுக் கட்டிவில் படுத்தான்; திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியால் அவனைக் கவிந்தணைத்த தூக்கம் பிடி நழுவித் தூர விலகியது; அதே