பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

303


தர்மாம்பாள் இன்ன பதில் சொல்வதென்று! தெரியாமல் திகைத்தாள்.

அதற்குள் தாதுலிங்க முதலியாரிடமிருந்து அடுத்த பயங்கரமான கேள்வியும் வந்துவிட்டது: "மேலாகலை எங்கே?"

தர்மாம்பாள் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்ட திருடனைப்போல் தவித்தாள். ஏதாவது கூறிச் சமாளிக்கலாம் என்றாலும், தன் கணவனின் கோபாவேசத்தின் முன்னிலையில் அவளது சிந்தனை சிறிதுகூட அசைந்து கொடுக்கவில்லை.

"கமலா..கமலா." என்று தன்னையும் அறியாமல் மீண்டும் மீண்டும் முனகினாள் தர்மாம்பாள்,

தாதுலிங்க முதலியாரின் கோபாவேசமான கண்களில் திடீரென்று சந்தேக ரேகை படர்ந்தது; அந்த ரேகை படர்ந்ததுமே அவர் குரல் இடி முழக்கம்போல் எழும்பியது.

"என்ன முழுங்கிறே? எங்கே கமலா? சொல்லு சீக்கிரம்?"

அவரது உதடுகளும் முகமும் வக்கிர கதி பெற்றுத் துடிப்பது போலிருந்தன.

தர்மாம்பாள் தன் கணவனின் கோபத்தைத் தாங்கி நிற்க முடியவில்லை, அவள் உண்மையைச் சொல்லிவிட்டாள்!

அதைக் கேட்டதும், தாதுலிங்க முதலியாரின் கை தம்மையறியாமல் பளீரென்று தர்மாம்பாளின் கன்னத்தில் அறைந்தது; அவரது கண்கள் வெளியே துள்ளிக் குதிக்கப் - போவது போல் சிவந்து கனன்று கோபத்தைக் கக்கின.