பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வருகிறோம். நாளை, உங்களுக்கு முதலில் உலக நாதன் தன் கதையைக் கூறுவான். மகிழ்ச்சி தானே,” என்று மேகநாதன் கேட்டான்.

அனைவரும் ஒருமித்த குரலில் “மகிழ்ச்சி மகிழ்ச்சி” என்று கத்தினார்கள்.

"நாளை உங்கள் ஐந்து பேரையும் வரவேற்க நாங்கள் முன்னமேயே வந்து விடுவோம், தவறாமல் வரவேண்டும். ஏமாற்றி விடாதீர்கள் என் இனிய நண்பர்களே” என்று அழகப்பன் வேண்டுகோள் விடுத்தான்.

"தேவகுமாரர்கள் பொய்யுரைக்க மாட்டார்கள். தவறாமல் வருகிறோம்” என்று அனைவரும் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டனர்.

மறுவினாடி- அவர்கள் ஐவரையும் அந்த மண்டலத்தில் மட்டுமல்ல; கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எங்குமே காணோம். மாயமாய் மறைந்து விட்டனர்.

வழிமுழுவதும் அந்தச் சிறுவர்கள் அன்று நடந்த அதிசயத்தைப் பற்றியே பேசிக் கொண்டு வீடுபோய்ச் சேர்ந்தனர்.