பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

248

பதிற்றுப்பத்து தெளிவுரை


தெளிவுரை : பொய்மையற்றவன் செல்வக் கடுங்கோ வாழியாதன். அவனுக்கு அவன் மனைவியான வேளாவிக் கோமான் பதுமனின் மகள் பெற்றுத்தந்த மகன், பெருஞ் சேரல் இரும்பொறை. அவன், கொல்லிக் கூற்றத்திலுள்ள நீர்மை மிகுந்த மலையின் உச்சிப் பகுதியான இடத்திலே நிகழ்ந்த போரில், பல வேற்படை வீரர்கள் நிறைந்த படையினையுடையவனான அதிகமானோடு, சோழ பாண்டியராகிய இருபெரு வேந்தரையும் ஒருசேர வெற்றிகொண்டவன்; அவர்தம் முரசங்களையும் குடைகளையும் அணிகலன்களையும் பறித்துக் கொணர்ந்தவன்; புகழமைந்த சிறப்பினையுடைய போர்க்களத்தே களவேள்வியும் வேட்டவன்; குற்றமற்ற மகளிராகிய பகையரசரின் மனைவியர் இரங்கி வருந்துமாறு, அதிகனின் வலிமையை மீளவும் சென்று ஒழித்தவன்; தகடூர் கோட்டையை முற்றி அதனையும் கைப்பற்றியவன்; இத்தகைய புகழமைந்த அரிய வலிமையையும், ஒள்ளிய புகழையும் கொண்டவன் அவன் ஆவான். அத்தகையானாகிய பெருஞ்சேரல் இரும்பொறையைக் குற்றமில்லாத வாய்மையே மொழிவோரான அரிசில்கிழார் என்பார் பத்துப் பாட்டுகளாற் பாடினார்.

சொற்பொருளும் விளக்கமும்: கொல்லிக் கூற்றம் என்பது கொல்லி மலையைச் சூழ்ந்திருந்த நாட்டுப் பகுதி; இதற்கு உரியோனாக இருந்தவன் வல்வில் ஓரி; இவன் அதிகனுக்கும் இருபெரு வேந்தருக்கும் நண்பனாதல்பற்றி அவர் படையணிகள் இவனுக்கு உதவியாகச் சென்றிருக்கலாம்: ஓரியைச் சேரமான் அழித்த காலையில் அவனுக்கு உதவியாயிருந்தவன் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரி ஆவான்; காரியை இப்போரின் பின்னர்ச் சோழனும் அதிகனும் சேர்ந்து அழித்தனர். காரியின் அழிவுக்குப் பின்னர் பெருஞ்சேரல் இரும்பொறை தகடூரை முற்றி அழித்தான் எனல் பொருந்தும். இப்போரின் பெருமை தோன்றத் தகடூர் யாத்திரைச் செய்யுட்கள் எழுந்துள்ளன. பதுமன் தேவி - பதுமனின் மகள். நீர் கூர் - நீர்வளம் மிகுந்த, மீமிசை - உயர்த்த மலையுச்சியில். உடனிலை வென்று - ஒருசேர வெற்றி கொண்டு. உரைசால் சிறப்பு - புகழமைந்த சிறப்பு. அடுகளம் - பகைவரை அட்ட களம். களம்வேட்டல் - அடுகளத்தில்போர்த் தெய்வமான காடுகிழாளுக்கு நிணச்சோறு சமைத்துப் படைத்து வழிபடுதல். அருந்திறல் - பகைவரால் வெற்றி கொள்ளுதற்கரிய பெருந்திறல். ஒள்ளிசை - ஒளியோடு விளங்கும் புகழ் சிறந்த புகழ்.