பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

பழகுமொழிச் சொல்லாக்கம் பகுத்தறிவின் ஆக்கம்
      பறந்து சென்று நிலவுலகைப் படம்பிடிக்கும் ஆக்கம்
அழகுவயற் செந்நெல்லின் ஆக்கத்தால் அன்றி
      அமையாதே; அமையாதே; என்றும் அமை யாதே!

நீலமலர் வயலெல்லாம் நெற்பயிரி னூடே
      நிறைந்திருக்கப் பயிரழிக்க நல்லுழவன் கண்டே
கோலமயில் இல்லாளின் கண்ணென்றே எண்ணிக்
      குனிந்துகளை எடுக்காமல் விட்டுவிட்டா போவான்?
சீலமிலாக் கொடியோரை வேந்தொறுத்தல் இந்தச்
      செய்கைக்கு நேரென்றே செப்பியவன் எந்த
ஞாலத்து முதல்வர்க்கும் அமைச்சென்றே சொல்வேன்!
      நல்லுழவன் இல்லையெனில் பாட்டெடுக்கப் போமோ?

‘வரப்புயர வேண்டு’ மென வாழ்த்திய நல் ஔவைப்
      பாட்டிக்கு மாத்தமிழில் வாழ்த்துரையா இல்லை?
வரப்புயர நீருயரும்; நீருயர நட்ட
      நெல்லுயரும்; பசும்பாம்பாய் வளர்ந்துயரும்; முற்ற
உரவு2 நெற் கதிருயரும்; குடியுயரும்; நாட்டில்
      உற்றகுடி உயர்வதினால் வளமுயரும்; ஆளும்
அரசுயரும்; அரசாளும் அமைச்சுயரும்! நாட்டின்
      அச்சாணி உழவன்தான்! மறுப்பவரும் உண்டோ?

மின் கண்டு வித்தினான் நல் லேருழவன் முன்னாள்;
      மிகுவிளைவு கண்டதில்லை; கார்பொய்த்த துண்டாம்!
பின் கண்டான் மழைநாளில் பெய்யு மழை நீரைப்;
      பெருங்குளத்தில் ஏரியினில் தேக்கவழிகண்டான்!
என் கண்டான்? கோடையிலே ஏரிவற்றக் கண்டான்!
      ஏங்கியேங்கி எண்ணிப்பின் கிணுறுவெட்ட லானான்!
முன்கண்ட நிலையினிலும் முன்னேற்றம் வேண்டி

      முயன்றதனால் தமிழரசில் புழைநீர்கண் டானே!