பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131 ஒடிப் பதுங்கக் குரலால் உணர்த்துவதும், தேடிப் புழுவைச் சிறுகுஞ்சு தின்பதற்குக் குப்பையைச் சீய்ப்பதுவும், கூவி அழைப்பதுவும் ஒப்பில்லா அன்பின் உணர்வன்றி வேறென்னம்?

தென்னை பனைமரத்தின் ஒலைச் சிறுநுனியில் பின்ன முடியாத பேரழகுக் கூட்டையெலாம் சிட்டுகள் பின்னிக் குடியிருக்கும் சிற்றூர்போற் கட்டி யமைத்துக் கலகலப்பைத் தேக்கியே பாடி இணைந்து பறந்து திரிந்துமே கூடி இனப்பெருக்கம் கொள்தல் எதனாலாம்? உன்பெயர்த்தி, சின்ன உளிபோன்ற கண்ணழகி அன்னை அருகில் அமர்ந்தே உடலாட்டிப் பாவை பரிந்தெடுத்து நீராட்டிப் பாலூட்டிக் கோவை இதழூன்றிக் கொஞ்சுவதும், கொஞ்சிப்பின் கண்ணுறங்கக் காலிடையில் இட்டுத்தா லாட்டியே கண்ணுறங்கிக் கொண்டிருக்கும் காட்சிதான் என்னேடி!

வானில் தவழ்ந்து வருகின்ற வான்மதியைத் தேன்மொழியின் நெற்றிக்கும், செவ்வாய் முகத்திற்கும் ஒப்புவமை காட்டி உயர்கவிதை யாப்பதல்லால் இப்புவியிற் பாவலர்கள் என்செய்தார்? இன்றுலகில் ஏவுகணையேறி எண்ணரிய விண்ணிலவில் தாவித் தரையிறங்கித் தன்னாடு மீளல் அறிவின் விளைவென் றறைவார்கள்! நானே நெறிநின் றொழுகிய நீளன்பின் வெற்றிக்