பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

திருவும் தெளிவும் மருவுதல் பெற்றால்
இருவே றுலகம் இருக்கா தென்றுமே!

கீழை நாடு, மேலை நாடென
இருவே றுலகம் என்றுரைத் தாலும்
வாழும் மக்களும் வாழ்வும் என்றும்
ஒருமையோ டொட்டி உயர்ந்தே வந்தன!

தோண்டப் பட்டது தோணியாய்க் கொண்டு
தாண்டிக் கடலைத் தகு பொருள் விளைத்தும்
கலத்தைப் பறித்தும் கடல்முத் தெடுத்தும்
நிலத்தில் வாழ்ந்த நீள்புகழ் தமிழரைக்
‘கீழை நாட்டுக் கிரேக்கர்’ என்றே
உரைத்தனர்; மேலை நாட்டார். உரைத்தனர்!

கலையிலா வாழ்க்கை கலையிலா வாழ்க்கை!
உளத்தில் தோன்றும் உணர்வின் படைப்பே
கலையாம்! கலைப்பயன் இன்பப் பெருக்காம்!
மக்கள் உணர்வை வடித்தே அறிவால்
செப்பம் செய்ததே செழுங்கலை யாகும்!
மொழியில் செயலில் முறைவைப் பிருப்பினும்
இருவே றுலகக் கலையின்
ஒருமைப் பாட்டை உரைப்பன் கேளீர்!

(பஃறொடை வெண்பா)


“வையக மெல்லாம் கழனியா—வையகத்துச்
செய்யகமே நாற்றிசையின் தேயங்கள்—செய்யகத்து
வான் கரும்பே தொண்டை வள நாடு—வான் கரும்பின்
சாறேயுந் நாட்டுத் தலையூர்கள்—சாறட்ட
கட்டியே கச்சிப் புறமெல்லாம்—கட்டியுள்
தானேற்ற மான சருக்கரை மாமணியே

ஆனேற்றான் கச்சி யகம்.”