பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

“மூலமும் முடிவும் அற்றதே காதல்!”
பால்சாக்கு3 பகர்ந்த காதல் இலக்கணம்!

“யாயும் யாயும் யாரா கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்?
யானும் நீயும் எவ்வழி யறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே!”

இக்கூற் றையே பால்சாக் கென்போன்
இயம்பும் சொற்றொடர் இயம்பக் கேண்மின்!
“வயதை இனத்தை மதியாது காதல்!
அறிவில் அழகில் ஆழாது காதல்!”

நம்மரும் இளங்கோ காளிதாசனுமே
நாட்டிய புகழையே மேலை நாட் டறிஞர்
நாடகப் புலவர் சேக்ஸ்பியர்4 யூகோ5
நாட்டினர்; இலக்கியத் தொருமை காட்டினர்.

வீரச் சுவைக்கு ஓமரை உரைப்பர்;
வேறென் உண்டாம் புறநானூற்றில்?

காதற் சுவைக்குத் தாந்தே தந்தை;
கற்றோர் ஏற்றும் கலித்தொகை என்னாம்?

“பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார்.
இறந்தார் என்கை இயல்பே யாகும்!”
மேகலை செப்பும் மெய்த்தமிழ் இதுவாம்
“சாவின் வழியே ஒவ்வோர் உயிரும்
சார்ந்தே ஆகும் தப்பா தென்றும்!”

மேலைநாட்டறிஞன் விளம்பியே உள்ளான்!