பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

"வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை" எனும் திருக்குறள்!
"வாளின் வலிதே எழுதுகோல்!" என்றே
மேலை நாட்டு வால்டேர்7 விளம்பினான்!

"பொய்யுடை ஒருவன் சொல்வன் மையினால்
மெய்போ லும்மே மெய்போ லும்மே!"
என்றோர் அரசன்8 இயம்பினான் இங்கே!
"வலிமை யுடையான் வார்த்தை என்றும்
உண்மை!" வபோந்தேன்9 உரைத்த கவியிது!

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!"
புறப்பாட் டுரைக்கும் பொன்மொழி இதுவாம்!
"உண்டிக் கடுத்தது ஒப்பிலாக் கல்வி
கொண்டு வாழ்தல் குடிமகன் கடமை!"
என்றான் ழுய்ல்பெரி10 மேலைநாட் டமைச்சன்!

“நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்(கு)
இனத்தியல்ப தாகும் அறி(வு)" எனும் தமிழ்மறை!
"பழகு மிடத்தைப் பகர்வாய், நீயார்
என்றே நொடியில் இயம்புவன்!"11 என்று
மேலைநாட் டொருவன். விளம்பியே உள்ளான்!

"யாதும் ஊரே! யாவருங் கேளிர்!"
கோதிலாத் தமிழன் கொள்கை இதுவாம்!
"நாற்றிசைக் கடல்சூழ் நல்லுல கத்தில்
பிறந்தோர் யாவரும் ஒருதாய்ப் பிள்ளைகள்!"12
என்பது மேலை இலக்கியத் துணிபாம்!

இருவே றுலகத்து இலக்கியம் வளர்ந்த
இயல்பினும் ஒருமை இருப்பதைக் காணீர்!