பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

வீர இலக்கியம் விரும்பினர் மக்கள்;
காதலும் அதனுடன் வளர்ந்தே வந்த(து)!
இயற்கை வளத்தை இயம்பினர் பின்னர்;
இடையிடை அறத்தை எழுதத் தொடங்கினர்;
குடியர சாட்சிக் கொள்கை விளக்கி
முடியர சாட்சிக்கு முடிவு கண்டனர்!
இதுவே மேலை நாட்டார் இலக்கியம்!
தமிழகம் தந்த அகமும் புறமும்,
தமிழ்மறை கண்ட திருக்குறள் வளமும்,
“தனியொரு வனுக்குண விலையெனில் சகத்தினை
அழித்திடு வோ” மென் றார்த்த பாரதியும்,
“புதியதோர் உலகம் செய்வோம்; கெட்ட
போரிடும் உலகை வேரொடு சாய்ப்போம்!”
என்றவென் னாசான் பாரதி தாசன்
இடித்து முழக்கிய இன்றமிழ்ப் பாட்டும்
இலக்கியம் வளர்ந்ததை எடுத்தியம் பாதோ?

மொழிவே றுண்மை மொழிதரு பொருள் பொது;
முந்நீர் உலகக் கலையிலக் கியங்கள்
மக்கள் படைப்பாம்! மறுப்பார் இல்லை!
ஆற்றங் கரைபோல் அழியும் கலையும்
அலைகடல் போல அழியாக் கலையும்
நீரில் குமிழிபோல் நிலையா இலக்கியம்,
நெடுவான் பரிதிபோல் நிலைத்த இலக்கியம்
இருவே றுலகில் என்றும் உண்டாம்!

மக்கட்கு வகுத்த கலையிலக் கியங்கள்
எக்கா லத்தும் நிலைத்தே நிற்கும்!
எக்கா லத்தும் நிலைத்த இலக்கியம்
இருவே றுலகில் இன்பம் பயந்தே