பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

பாண்டிய மன்னர்

ரைகள் மலர்ந்தன. மாந்தர் அனைவரும் தத்தம் நிலைமைக்கேற்ற முயற்சித் துறைகளில் ஊக்கம் உடையாராய் வேண்டுவன செய்யத் தொடங்கலாயினர். பாண்டிய நாட்டுத் தலைநகராகிய மதுரைமா நகரில், சிவாலயம், விஷ்ணு ஆலயம் முதலிய இடங்களில் காலையியங்களின் முழக்கம் எழுந்தது. அன்பர் எண்ணிறந்தார், பாண்டியர்தம் பொய்யாக் குலக்கொடியாகிய வையைமா நதியில் நீராடித் திருநீறு தரித்துச் சிவத்தியான பரராய் இறைவனை வணங்கி வாழ்த்தி மகிழ்ந்தனர்.

பாண்டிய மன்னர் அரண்மனையில் அறிவரும் முனிவரும் புலவரும் அமைச்சரும் பிறரும் கூடி, அன்று அரசற்கு முடி சூட்டுத் திருவிழா நிறைவேற்றும் கருத்தோடு நிறைந்திருந்தனர். முதுகுடுமி என்ற இளவரசன், சூரிய உதயத்தின் முன்பே உரிய பெரியார் உதவி பெற்றுப் பட்டாபிஷேகச் சடங்கிற்குரிய சமயத்தை எதிர்பார்த்து, முகமலர்ச்சியோடும் திருநீறும் கண்டிகையும் விளங்கும் திருக்கோலத்தோடும் அரசச்செல்வம் அடையும் நிலைபெற்றும் வணக்கம் மிகவும் வாய்க்கப் பெற்றவனாய் விளங்கினான். புரோகிதரும் பிற அந்தணரும் தமக்கென அமைந்த ஆதனங்களில் வீற்றிருந்தனர். அமைச்சர் தலைவர், ஆண்டிலும் அனுபவத்திலும் அரசியலறிவிலும் முதிர்ந்த பெரியா ராகையால், அவரது ஆணைப்படியே உரிய வைதிகச் சடங்குகள் நிறைவேறின. புண்ணிய தீர்த்தங்கள் பலவும், தென்கடல் நீரும், கங்கை நீரும், காவிரி நீரும், வைகை நீரும், தாமிரபர்ணி நீரும் கொணர்ந்து, புரோகிதரும் பிறரும் அரசனாதற்குரிய முதுகுடுமியை மனமார வாழ்த்தி, அபிடே-