பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

பாண்டிய மன்னர்

பாண்டிய மன்னர் பிறகு கண்ணகி மறுகின் நடுவில் நின்றுகொண்டு, “நான்மாடக் கூடல் நகரில் வாழும் மகளிரும் மைந்தரும் வானகத்தில் வாழ்வுறும் தேவரும் பிற மாதவரும் கேண்மின்கள்: என் அன்பிற்குரிய தலைவரைக் கொடுங்கோன் முறையாற் கொன்ற அரசன்மீதும் அவன் ஆண்ட நகரின் மீதும் யான் சினம் கொண்டேன். என்னிடம் யாதும் குற்றமில்லை,” என்று கூறிவிட்டு, இடமார்பை வலக் கையால் திருகி, மதுரை நகரை மூன்று முறை வலம் வந்த பிறகு, பெருந்தெரு நடுவிலே எறிந்தாள். அக்கணத்தில் அவளெதிரே, நீல நிறத்தினனும் செக்கர் வார் சடையானும் பால்போல் வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலம் பூண்டானும் ஆகிய அக்கினி தேவன் தோன்றினன். அவன், “மாபத்தினியே, நினக்கு மன வருத்தம் தரும் தவற்றை இழைக்கும் காலத்தே இந்நகரத்தை விழுங்கி யழிக்குமாறு முன்பே யான் ஓர் ஆணை பெற்றுளேன். இப்பொழுது யான் யார் யாரை யொழித்து, யார் யாரை யழித்தல் வேண்டும்?” என்று கேட்டனன். கண்ணகி,

“பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனும் இவரைக் கைவிட்டுத்

தீத்திறத்தார் பக்கமே சேர்க.”[1]

என்று ஆணை தந்தாள். பாண்டியன் நெடுஞ்செழியனால் அறநெறி பிழையாது ஆளப்பெற்றுவந்த மதுரை நகரம், அன்று கண்ணகி யென்ற மாபெரும்பத்தினியின் கற்புத் தீயால் எரிந்து அழிந்தது.


  1. சிலப்பதிகாரம் - வஞ்சின மாலை