பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

பாண்டிய மன்னர்

தான் நம்பிய ஒன்றே சிறந்தது என்ற கருத்துக் கொண்டவனுமல்லன். ‘மன்னன் எவ்வழி மன்னுயிர் அவ்வழி,’ என்பராதலால், குடிகள் மத வாதங்கள் காரணமாக மனமாறுபாடு கொள்ளவில்லை. இவ்வாறு இருக்கும் நாட்களிலே, மதுரை நகரிலேயிருந்த பெரியதொரு மண்டபமாகிய பட்டி மண்டபத்தில், ஒரு நாள் எல்லா மதவாதியரும் கூடித் தத்தம் மதத்தைப்பற்றி விவகரிக்கலாயினர். பெரியதொரு திருவிழா நடப்பதுபோலப் பல்லாயிர மக்கள் அம்மண்டபத்திற் கூடினார்கள். அரசனும் பிரசன்னமாயிருந்தான். அறிவரும் அறிஞரும் புலவரும் துறவிகளும் ஆகிய பலர் அங்கு வந்து, தத்தமக்கு ஏற்ற ஆசனங்களில் அமர்ந்திருந்தனர். சிறிது நேரம் பல வகை வாத்தியங்களும் முழங்கின. பிறகு நிச்சப்தம் குடி கொண்டது. எல்லோரும் அரசன் முகத்தையே பார்ப்பாராயினர். அவன் பின்வருமாறு பேசினன் :

“பெரியோர்களே, இன்றே நன்னாள், நன்றே இந்நாள்! என் முன்னோர்கள் இப்பட்டி மண்டபத்தை நிருமித்த நோக்கமே இதுவாம். இந்நாட்டில் இக்காலத்தில் வழங்கும் மதங்கள் பலவாம். ஒவ்வொன்றையும் பற்றி வாழ்வோர் தொகையும் மிகுதியாம். எல்லா மதங்களுக்கும் அடி நடு முடிவு என்ற மூன்றும் ஒன்றே. இடையிலே தோன்றி விரிந்த கிளைகளே வேறுபாடுடையன என அறிஞர் கூறுவர். இங்கு நிறைந்திருக்கும் பல வகை மதத்தினரும் தத்தம் கொள்கைகளின் சாராமிசங்களைத் தெரிவிப்பாராகில், எல்லாவற்றிற்கும் உள்ள ஒற்றுமையை ஆராய்ந்துணர்தல் எளிதாகும். இவருள் நாஸ்திகரும் சிலர் இருக்கலாம்; ஆஸ்திகர் பலர் இருக்கலாம். எவரேயாயினும், தத்தம் கருத்தைச் சிறிதும் அச்சமும் கூச்-