பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

பாண்டிய மன்னர்

குலத் தோன்றல் வேண்டுவன செய்யத் தொடங்கி யிருக்கின்றார். மும்மண்டலங்களாகிய தமிழ் நாடு முழுமைக்கும் தலைவராய் முக்கொடியும் ஒன்றாக்க வல்ல வேந்தராய் நம் அரசரை நாம் பெற்றது நம்மனோர் பாக்கியமே. இப்பொழுது நடந்து முடிவு பெற்ற போரின் பயனாக நமது கயற்கொடி, விற்கொடியையும் புலிக்கொடியையும் தன்னுள் அடக்க வல்லதாயிற்று. இவ்வாறே இனி நாடு முழுவதும் சென்று, இமய மலையில் நமது நாட்டுக் கயல் பொறிக்கப்படுமாறு இறைவன் திருவருள் பொழிக.

உடனே மங்கள வாத்தியங்கள் பல முழங்கின. அங்கு வந்து நிறைந்திருந்த அறிஞரெல்லாம் புலவர் குழுவை நோக்கினர். வாத்திய முழக்கம் நின்றதும், மதுரை மருதன் இளநாகனார் என்ற புலவர் எழுந்து. பேசியதன் சுருக்கம் வருமாறு:

"மகா மேரு மலையாகிய வில்லிலே வாசுகியாகிய நாணைக் கோத்து, ஒப்பற்றதோ ரம்பைச் செலுத்தி, மூன்று மதில்களையும் எய்து, மிக்க வலிமையுடைய தேவர்க்கு வெற்றி தேடிக் கொடுத்த கறைமிடற்றண்ணலது அழகிய நெற்றியில் விளங்கும் ஒரு கண் போலச் சேர சோழரைக்காட்டிலும் மேம்பட்டு விளங்கும் நன் மாற, மிக்க சினமுடைய போர்க்களிறுகளும், விரைந்து செல்லும் குதிரைகளும், நெடுங்கொடிகளைக் கட்டிய பெரிய தேர்களும், உரம் மிகுந்த போர் விருப்பங் கொண்ட வீரரும் என்ற இந்நாற்படையால் சிறப்புற்றதாயினும், அரசினது வெற்றி அறநெறியை முக்கிய காரணமாய் உடையதாம். ஆகையால், இவர் நமர் என எண்ணி அவர் செய்த குற்றத்துக் கேற்ற தண்டம் விதியாமலும், இவர் பிறர் என எண்ணி அவரிடம் உள்ள குணத்தை மறந்து அநீதி இயற்றாமலும், சூரியன் போன்ற வெந்திறல் ஆண்மையும் சந்திரன் போன்ற