பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

37

தம்பதிகள் இருவரும் குழந்தைகள்தான் என்றாலும், பல ஆண்டுகள் அவர்கள் அமர்ந்து பேசவே சமயம் வாய்க்கவில்லை. ராஜன்பாபுவின் மாணவ வாழ்க்கைக்குப் பிறகே அவருக்கு கணவன் மனைவி தாம்பத்தியம் என்றால் என்ன என்று தெரிந்தது.

அதற்குப் பிறகு தேச சேவை; சுதந்திரப் போரின் பணிகள்; பொதுமக்கள் பிரச்சனைகள், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் இவ்வளவும் சிறுகச் சிறுகவும் இடைவெளி விட்டும் ஏற்பட்டதால் குடும்ப வாழ்க்கையின் இன்பத்தை அவர்களால் முழுமையாக அனுபவிக்கவே முடியவில்லை.

வழக்குரைஞர் பணியிலே பாபு ஈடுபட்ட போது, அடிக்கடி கல்கத்தா நகர் நீதிமன்றத்துக்குப் போகும் நிலை நேரும், ஆனால், அவரது வீட்டார் எல்லாரும், ஏன் புதுமணப் பெண் உட்பட எல்லாருமே பாட்னாவிலேயே தங்கிவிட எண்ணினார்கள். அதற்கேற்றவாறு பாபுவும் அங்கேயே தங்கிவிட்டார்.

கல்கத்தா நகரிலே ராஜன்பாபு 1920-ஆம் ஆண்டில் துவங்கிய ஒத்துழையாமைப் போர் இயக்கத்திலே கலந்து விட்டார். இந்த நேரத்திலே குடும்பம், இல்வாழ்வு இன்பம் எல்லாவற்றையும் மறந்துதானே ஆக வேண்டும்? பாட்னாவிலே உள்ள ‘சதாகத்’ ஆசிரம வாழ்க்கையே அவருக்கு வீடாக மாறியது. ஆனாலும், இல்லற வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் அவரைப் பாதிக்காமல் இருக்குமா? இருப்பினும் இன்ப துன்பங்களும் அவருக்கு இணைந்தே வந்தன.

இந்த இக்கட்டான நேரத்தில், ராஜன் பாபுவின் அண்ணன் மகேந்திர பிரசாத் மறைந்தார். குடும்பத்தின் எல்லாப் பொறுப்புகளையும் கவனித்துக் கொண்ட பண்பாளர் அல்லவா? தம்பியின் முன்னேற்றமே தனது குடும்ப முன்னேற்றம் என்று நட்ந்து வந்தவர். பொறுப்புகளை எல்லாம் ராஜன் பாபு தோள்களிலே சுமக்க வைத்து விட்டுக் காலமாகி விட்டார்.