பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

இராஜேந்திர பிரசாத்

அரிசி ஆலை ஒன்றை நட்டத்திலும் நடத்தி வந்தவர் மகேந்திர பிரசாத். எப்படியோ அவர் சாகும்போது அறுபதாயிரம் ரூபாய் கடன்களை வைத்து விட்டு மறைந்தார். அந்தக் கடன் அடைக்க இராஜேந்திரர் தனது நிலத்தை விற்றார். அப்போதும் தீரவில்லை கடன் தொகை. சேட்ஜம்னா லால் பஜாஜ் என்பவர் உதவி செய்தார். தீர்ந்தது கடன்.

இராஜேந்திர பிரசாத்திற்கு இரண்டு ஆண் மக்கள். மூத்தவர் மிருத்யுஞ்சயன். இளையவர் தனஞ்செயன். மகேந்திர பிரசாத் மறைந்த பிறகு அவரது குடும்ப பாரத்தை இராஜேந்திர பிரசாத்தின் இரு புதல்வர்களும் ஏற்று நடத்தி வந்தார்கள்.

மூத்த மகன் மிருத்யுஞ்சயனுக்கு தேச பக்தர் விரஜகிஷோர் பாபுவின் மகளைத் திருமணம் செய்து வைத்தார். சிறிது காலத்துக்குள் அவர் தனது மனைவியை இழந்தார். அதே நேரத்தில் சிறிது நாட்கள் கழித்து அவரது மாமனாரும் மாண்டார். இந்த நிகழ்ச்சிகள் அந்த வீட்டையே மிகவும் சோகமயமாக்கி விட்டன. இதோ அந்த சோகங்களை அவரே எழுதுகிறார் படியுங்கள்.

“பீஹாரில் ஹிந்து முஸ்லீம் கலகம் என்று கேள்விப்பட்டு பாட்னா நகர் சென்று கொண்டிருந்தோம். மிருத்யுஞ்சயன் மனைவி இறந்து விட்டதாகச் செய்தி வந்தது. வீட்டுக்குப் போனேன். பெண்களது ஒப்பாரியும், குழந்தைகளது ஓசையும் வீட்டிலிருந்து வந்து கொண்டிருந்தது. அங்கிருந்து புறப்பட்டு, பாட்னா மாவட்டத்திலே நடந்து கொண்டிருந்த இந்து - முஸ்லீம் கலவரங்களை அடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டேன். ஆயிரக்கணக்கானவர்கள் கொலையுண்டு, ஆயிரக் கணக்கான வீடுகளில் அழுகையும் புலம்பலுமாக இருந்ததைக் கேட்டேன். அங்கு என் வீட்டுத் துக்கம் வெட்கி அடங்கிவிட்டது போலும்.”

குடும்பத்தில் நடந்த மற்றொரு மரண சம்பவத்தைப் பற்றி பாபு எழுதுவதைப் படியுங்கள்.