பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1968 - இரண்டாம் உலகத் தமிழாராய்ச்சி
மாநாட்டை யொட்டி பாரதிதாசன் உருவச்சிலை
சென்னைக் கடற்கரையில் நிறுவப்பட்டது.
1969 - பாரதிதாசனின் பிசிராந்தையார்
நாடகத்திற்குச் சாகித்திய அகாதமி பரிசு
வழங்கியது.
1971 - ஏப்ரல் 29ஆம் நாள் பாரதிதாசன் பிறந்த
நாள் விழா புதுவை அரசு விழாவாகக்
கொண்டாடப்பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு
விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த 95ஆம்
எண்பெருமாள் கோயில் இல்லம்,அரசுடைமை
ஆக்கப்பட்டு நினைவு நூலகமும், காட்சிக்
கூடமும் நிறுவப்பட்டன.
1972 - ஏப்ரல் 29இல் புதுவை அரசினரால்
பாவேந்தர் முழு உருவச்சிலை புதுவையில்
திறந்து வைக்கப்பட்டது.
30.4.1982 -
ஏப்ரல் திங்களில் பாரதிதாசன் பெயரில்
பல்கலைக்கழகம் திருச்சிராப் பள்ளியில்
உருவாக்கப்பட்டது.
15.5.1993 -
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 'பாரதிதாசன்
உயராய்வு மையம்' அமைக்கப்பட்டது.

 இவைகளன்றித் தமிழக அரசால் பாரதிதாசன் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. தமிழகத்திலும் புதுவை மாநிலத்திலும் பாரதிதாசன் பெயரில் தெருக்கள், ஊர்கள், நகர்கள், உருவாக்கப்பட்டுள்ளன; கலைக்கல்லூரிகளும், பொறியியற் கல்லூரிகளும் நிறுவப்பட்டுள்ளன; பல அமைப்புகளும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன: தமிழக அரசும் புதுவை அரசும் பல இலக்கிய விருதுகளும், பரிசுகளும் ஆண்டுதோறும் அவர் பெயரால் வழங்குகின்றன.