பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கல்வியும் ஆசிரியப் பணியும்

11


இலைபடர்ந்த பொய்கை யிடத்தழுதல் கண்டு
முலைசுரந்த அன்னையோ முன்னின்-நிலைவிளம்பக்
கொங்கை சுரந்தவருட் கோமாளோ சம்பந்தா
இங்குயர்ந்தாள் ஆர்சொல் எனக்கு?

என்ற பாடலை எடுத்துச் சொல்லி,

“ஞானசம்பந்தருக்கு அன்னையர்களாக இப்பாடலில் இருவர் குறிப்பிடப்படுகின்றனர். ஒருவர் உமா தேவியார் மற்றொருவர் பாண்டிமாதேவியான மங்கையர்க்கரசியார். இந்த இருவருள் எவர் சிறந்த அன்னை?" என்று கேள்வி கேட்டார் புலவர்.

"மங்கையர்க்கரசிதான்" என்று உறுதியாக விடையிறுத்தார் சுப்புரத்தினம்

"எப்படி? என்றார் புலவர்.

சுப்புரத்தினம் சிறிதும் தயக்கமின்றி விளக்கம் சொல்லத் தொடங்கினார்.

"பசியால் குழந்தை அழுமுன்பே பால் நினைந்து ஊட்டும் தாய் தலையன்புடையவள். குழந்தை அழுவதைக் காதால் கேட்டவுடன் முலைசுரந்து ஊட்டுபவள் இடையன்புடையவள். குழந்தை அழுவதைக் கண்ணால் கண்ட பிறகு பாலூட்டுபவள் கடையன்பினள். சம்பந்தக் குழந்தை பொய்கைக் கரையிலே பாலுக்காக ஏங்கியழுததைக் கண்ணால் கண்ட பிறகும் உமாதேவி பாலூட்ட வில்லை. இறைவன் உணர்த்திய பிறகே ஊட்டினாள். இவளை எவ்வாறு தாயென்று சொல்ல முடியும்?

"ஆனால் மங்கையர்க்கரசியின் நிலைவேறு" 'சீகாழியில் சம்பந்தக் குழந்தை பாலுக்காக அழுதது' என்று இறந்த கால நிகழ்ச்சியை எதிரில் நின்றவர்கள் எடுத்துரைத்த கணமே பாண்டிமாதேவியின் மார்பகங்கள் விம்மிப் பரந்து பாலைப் பொழிந்தன. மேலும் இப்பாடலில் உமாதேவி 'முலைசுரந்த அன்னை' என்று சாதாரணமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறாள். ஆனால் மங்கையர்க் கரசியோ 'கொங்கை சுரந்த அருட் கோமகள்' என்று குறிப்பிடப்படுகிறாள். 'அருள்' என்னும் அடைமொழியே, அவள் சிறந்த அன்னை என்பதைக் காட்டும் என்று விளக்கமாக விடையிறுத்தார் சுப்புரத்தினம்.