பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

பாரதிதாசன்


பாங்கன் ஒருவன் கிடைத்தான் அரவிந்தர்க்கே
பாரதி ஓர் தமிழ்க் கவிஞன் நாட்டின் அன்பன்
தூங்கியது நாடந்தாள்; இரண்டு பேரும்
சொல்லாலே உணர்வுதந்தார்; ஏடும் தந்தார்
வங்காளச் சிங்கமவன் எண்ணம் செய்வான்
வரிப்புலிப் பாரதியதனைத் தமிழாய்ச் செய்வான்

என்று அரவிந்தர், பாரதி ஆகியோரின் அரும்பணிகளைப் பாராட்டிப் பாடுகிறார் பாரதிதாசன்.

வெள்ளையன் கப்ப லாலே
விரிந்தஇந் நாட்டின் செல்வம்
கொள்ளைகொண்டோடல் கண்டு
கொதிப்புற்ற சிதம்ப ரன்பேர்
பிள்ளைதான் பேரூக் கத்தால்
பிழைக்கவந் தடிமை கொண்ட
நொள்ளையர் மாயச் செய்தான்
நோன்மைசேர் கப்பல் விட்டான்.

என்று தேசபக்தர் வ.உ.சி யின் தொண்டைப் பாராட்டுகிறார் பாரதிதாசன்.

பாரதியின் நண்பரும் தீவிர தேசபக்தருமான மாடசாமியை ஒற்றர் பிடியிலிருந்து காப்பாற்றத் தாம் மேற்கொண்ட ஆபத்தான முயற்சியை

நாடுதொழும் ஊழியரை
நான் காக்க ஓர்வீட்டு
மாடியினின்றே குதித்து
மான்போலும் ஓடினேன்.

என்று குடும்பவிளக்கில் ஒரு முதியோர் கூற்றாகக் கூறுகிறார். மேலும் மாடசாமியைக் கப்பலில் ஏற்றிச் சைகோனுக்கு அனுப்ப நடுக்கடலில், தாம் பட்ட துன்பத்தையும் பாடுகிறார். பாரதியார் இட்ட பணியை முடிக்கச் சென்னைக்குச் சென்று ஒரு செட்டியார் கடையில்