பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேசியக் கவி

41

"இதந்தரும் சமநோக்கம் இல்லா நிலத்தில் நல்ல
சுதந்தரம் உண்டாகுமோ”

என்று கேள்விக்கணை எழுப்புகிறார் பாரதிதாசன்.

தீண்டாமை என்னுமொரு பேய்-இந்தத்
தேசத்தில் மாத்திரமே திரியக் கண்டோம்-எனில்
ஈண்டுப்பிற நாட்டில் இருப்போர்-செவிக்கு
ஏறியதும் இச்செயலைக் காறி உமிழ்வார்-

என்று தீண்டாமையின் இழிவையும் சுட்டிக்காட்டுகிறார். 'ஆலய உரிமை' என்னும் பாடலில் தாழ்த்தப்பட்டோருக்கு நுழைவுரிமை மறுக்கப்படுவதை வன்மையாகக் கண்டித்து

தாழ்த்தப் பட்டார்க்குத் தனிக்கோயில் நன்றெனச்
சாற்றிடும் தேசமக்கள் அவர்
வாழ்த்தி அழைக்கும் சுதந்தரம் தன்னை
மறித்திடும் நாச மக்கள்
முப்பது கோடியர் பாரதத்தார் இவர்
முற்றும் ஒரே சமூகம் என
ஒப்புந் தலைவர்கள் கோவிலில் மட்டும்
ஒப்பாவிடில் என்ன சுகம்?

என்று பாடுகிறார் பாரதிதாசன்.

பெண்ணுரிமை பற்றிப் பாரதிதாசன் பாடியுள்ள அளவு வேறு யாரும் பாடவில்லை. கைம்மை மணத்தை ஆதரித்துத் தமிழில் துணிச்சலாகக் கவிதை பாடியவர் பாரதிதாசன். 1923ஆம் ஆண்டில் வெற்றி நெருக்கம் என்ற தலைப்பில் தேச சேவகன் இதழில் ஒரு கும்மிப்பாடல் பாடியுள்ளார்.

வேட்கை இருக்குதடி இந்த நேரத்தில்
வெற்றி இருக்குதுபார் எதிரே
நாட்டில் விடுதலை என்பதோர் நற்பதம்
நம்மை நெருங்குது மாதர்களே!