பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

பாரதிதாசன்

தொடங்கினார். உடனே அவரைப் பின்பற்றிய பாரதிதாசனுக்கும் அக்கொள்கையின் பால் பற்றும் ஈடுபாடும் ஏற்பட்டது. அக் கருத்துக்களைத் தமது பாடல் மூலம் பாரதிதாசன் பரப்பத் தொடங்கினார்.

'எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான
இடம்நோக்கி நடக்கின்ற திந்த வையம்'

என்று கூறித் தமிழ் மக்களின் கவனத்தைப் பொதுவுடைமை நாடுகளின் பக்கம் திருப்பினார்.

நீரோடை நிலங்கிழிக்க, நெடுமரங்கள்
நிறைந்துபெருங் காடாக்கப் பெருவி லங்கு
நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக கல்லின்
நெடுங்குன்றில் பிலம்சேரப், பாம்புக் கூட்டம்
போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில்
புதுக்கியவர் யார்? அழகு நகருண்டாக்கி!

சிற்றுாரும், வரப்பெடுத்த வயலும், ஆறு
தேக்கியநல் வாய்க்காலும் வகைப்படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன்விளைக்கும்
நிறையுழைப்புத்தோள்களெல்லாம்.எவரின்தோள்கள்?
கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்
போயெடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?

என்று மக்கள் உள்ளத்தில் வரிசையாகக் கேள்விக் கணைகளை எழுப்புகிறார். அவ்வாறு தமது பச்சை ரத்தத்தைப் பரிமாறி இவ்வுலகை உருவாக்கிய பாட்டாளி மக்கள் எலியாகவும் முயலாகவும் வாழ ஏமாந்த காலத்தில் ஏற்றம் பெற்றவர்கள் புலிவேடம் போடும் கொடிய நிலையைப் பாட்டில் படம் பிடித்துக் காட்டுகிறார். உலகம் என்ற பழைய முதலாளியினைப் பகுத்தறிவு மன்றத்தில் நிற்க வைத்து,