பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புரட்சிக்கவி

51

பொன்னிறப் பருப்பும் புத்துருக்கு நெய்யும்
ஒருகையளவு பெறுக ஒவ்வொருவரும்.
பாகற் புளிக்குழம்பும் பழமிளகின்சாறும்
ஆகத் தக்கன அடைக எவரும்!
ஆழாக்குத் தயிர், அடைக்காய் ஒவ்வொரு
வாழைஇலையிவை வழங்குவார் தெருத்தொறும்.
விருந்தே நாளை விடியலில்; அனைவரும்
அருந்துக குடியாட்சி அமைக்கும் நினைவிலே!"

***

இதுகேட்டுத் தெருத்தோறும் பொதுவில்லம்
எதுவெனக் கேட்டே ஏகினர்
அதுவதுபெற்றே அடைந்தனர் வீட்டையே.

கவிஞனால் கனவு காணாமல் இருக்க முடியாது. பாரதிதாசன் கண்ட கனவுகளுக்கு அளவில்லை. அக்கனவுகளில் சில உடனே நடந்தேறும் சில காலம் கனிந்தபின் நடந்தேறும் சில நடந்தேறாமல் நின்றுவிடுவதும் உண்டு. என்றாலும் கவிஞன் கனவுகள் சுவையானவை!