பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் மறவர்

57

எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்

என்று பாடுகிறார். தமிழும் தமிழரும் எல்லாவித நலன்களும் ஆற்றல்களும் பெற்று உலகமக்களால் பாராட்டப்பெறும் நாள் எந்தநாளோ? என்று ஏக்கத்தோடு பாடுகிறார்.

என்னருந் தமிழ்நாட் டின்கண்
எல்லாரும் கல்வி கற்றுப்
பன்னரும் கலைஞா னத்தால்
பராக்கிர மத்தால் அன்பால்
உன்னத இமமலைபோல்
ஓங்கிடும் கீர்த்தி யெய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?

தாயெழிற் றமிழை, என்றன்
தமிழரின் கவிதை தன்னை
ஆயிரம் மொழியிற் காண
இப்புவி அவாவிற் றென்ற
தோயுறும் மதுவின் ஆறு
தொடர்ந்தென்றன் செவியில் வந்து
பாயுநாள் எந்த நாளோ,
ஆரிதைப் பகர்வார் இங்கே?

தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிவுரை கூறும் பாரதிதாசன்,

கருத்துற்று மலையூற்றாய்ப் பெருக்கெடுக்க வேண்டும்
கண்டதைமேற் கொண்டெழுதிக் கட்டுரையாக் குங்கால்
தெருத்துாற்றும்; ஊர்துற்றும்; தம்முளமே தம்மேற்
சிரிப்பள்ளித் தூற்றும் நலம் செந்தமிழ்க்கும் என்னாம்?

என்று எச்சரிக்கை விடுக்கிறார். பொதுமக்கள் நலம்நாடிப் புதுக் கருத்தை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். பொருளுக்காகப் புன்கருத்தைச் சொல்லக்கூடாது என்றும் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் அறிவுரை வழங்குகிறார்.