பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

பாரதிதாசன்


தமிழர்கள் இயற்கையில் ஆழமான ஈடுபாடு கொண்டவர்கள் என்பதற்குச் சங்க இலக்கியங்களே சிறந்த சான்று. இயற்கையழகு இடம்பெறாத சங்கப் பாடல்களே இல்லையென்று சொல்லலாம். மேலை நாடுகளில் இயற்கையைத் தனித்துறையாகப் பிரித்து, அதைப்பற்றியே பாடல் எழுதும் வழக்கம் உண்டு.

இப்பாடல்களை இயற்கைப் பாடல்கள் (Nature Poetry) என்றும், அவ்வாறு பாடும் கவிஞர்களை இயற்கைக் கவிஞர் (Nature Poets) என்றும் கூறும் வழக்கம் உண்டு. ஆங்கிலக் கவிஞர்களுள் வோர்ட்ஸ் வொர்த்தும் (Wordsworth) பிரெஞ்சுக் கவிகளுள் ஆல்பிரெட் தெ முய் சே (Alfrede de Musset) வும் சிறந்த இயற்கைக் கவிஞர்கள்.

தமிழ்நாட்டில் இயற்கையாகிய தனித்துறைக்கு முதன் முதலில் கவிதை நூல் எழுதியவர் பாரதிதாசனே. அந்த நூல்தான் அழகின் சிரிப்பு, அழகின் சிரிப்பைத் தொடர்ந்து 'எழிலோவியம்' என்ற இயற்கைப் பாடற் தொகுப்பு ஒன்றை வாணிதாசனும் அதைப் போலவே வேறு சில கவிஞர்களும் எழுதி வெளியிட்டிருக்கின்றனர்.

அழகின் சிரிப்பு பதினாறு தலைப்புகளிலான பாடல்கள் அடங்கிய ஒரு கற்பனைக் களஞ்சியம். வரிக்கு வரி சுவை குன்றாத வற்றாத தேனருவி. இயற்கையழகின் முக்கியக் கூறுகளையெல்லாம் இதில் ஒன்றுவிடாமல் தொகுத்துப் பாடியுள்ளார் பாரதிதாசன். இயற்கையைச் சுவைக்க அழகுணர்ச்சி வேண்டும். ஆனால் எல்லாருடைய கண்களுக்கும் அழகு நங்கை தட்டுப்படுவதில்லை; எதையும் ஈடுபாட்டோடு கூர்ந்து நோக்கும் கவிஞர் கண்களுக்கே தட்டுப்படுகிறாளாம். அழகாகிய அந்த நங்கை எங்கெங்கு வீற்றிருந்து இன்பமளிக்கிறாள் என்பதைப் பாரதிதாசன் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

 பரிதியிலே அவளைக் கண்டேன்!
கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்
சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்
தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப் பட்டாள்!
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்; ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்
தனிலந்த அழகென்பாள் கவிதை தந்தாள்.